தேடி வந்த பஞ்சாப் முதல்வர் பதவி- நிராகரித்தார் அம்பிகா சோனி! சீக்கியரை முதல்வராக்க வலியுறுத்தல்!
டெல்லி: தம்மை தேடி வந்த பஞ்சாப் முதல்வர் பதவியை மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி நிராகரித்துள்ளார். மேலும் பஞ்சாப் புதிய முதல்வராக சீக்கியர் ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும் எனவும் அம்பிகா சோனி வலியுறுத்தி உள்ளார்.
பஞ்சாப் முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர்சிங்குக்கு 50 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தமது முதல்வர் பதவியை அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அவர் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
மேலும் சண்டிகரில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
45 நிமிடம் உயிர் இல்லை.. மார்ச்சுவரி வரை சென்ற பெண்.. திடீரென எழுந்து பேசியதால் பரபரப்பு.. ஷாக்!
அம்பிகா சோனிக்கு வாய்ப்பு
இதனடிப்படையில் டெல்லியில் நேற்று இரவு முதல் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனியை முதல்வராக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அம்பிகா சோனியிடம் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
அம்பிகா சோனி நிராகரிப்பு
ஆனால் அம்பிகா சோனி, தமக்கு பஞ்சாப் மாநிலத்துடன் ஆழமான உறவு உள்ளது. மாநிலத்தின் முதல்வராக சீக்கியர் ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும். எனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா சோனி உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அம்பிகா சோனி கூறுகையில், பஞ்சாப் முதல்வர் பதவியை நான் ஏற்கவில்லை. சண்டிகரில் கட்சி பொதுச்செயலாளர் மற்றும் மேலிடப் பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை சீக்கியர் ஒருவர்தான் முதல்வராக வேண்டும் என்றார். இந்திரா காந்தியால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் அம்பிகா சோனி. அவரை முதல்வராக்குவதன் மூலம் பஞ்சாப் மாநில காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசல் ஓயும் என்பது டெல்லி மேலிடத்தின் எதிர்பார்ப்பு.
எம்.எல்.ஏக்கள் கூட்டம் இல்லை
இதனிடையே சண்டிகரில் இன்று நடைபெற இருந்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பர்கத்சிங், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இன்று மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த தேவை இல்லை என்றார்.
என்ன செய்வார் அமரீந்தர்சிங்
மேலும் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தனிக்கட்சி தொடங்கலாமா? என்பது குறித்து அமரீந்தர்சிங் ஆலோசித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த முடிவையும் அமரீந்தர்சிங் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். அமரீந்தர்சிங்கைப் பொறுத்தவரையில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சித்துதான் பிரச்சனையே. அதனால் சித்துவின் ஆதரவாளர் ஒருவர் முதல்வராக்கப்பட்டால் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்பதில் உறுதியாக இருக்கிறார். சித்துவின் ஆதரவாளர் முதல்வராக்கப்பட்டால் அமரீந்தர்சிங்கும் அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.