ஆம் ஆத்மிக்கு அபார வெற்றி.. எக்ஸிட் போல் முடிவுகளால் டென்ஷன்.. பாஜக எம்பிக்களுடன் அமித் ஷா மீட்டிங்
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு (ஆம் ஆத்மி) மகத்தான வெற்றி கிடைக்கும் என்று எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புக்கள் வெளியானதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு பாஜக எம்.பி.க்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, விஜய் கோயல், பிரகாஷ் ஜவடேகர், ஹர்தீப் சிங், நித்யானந்த் ராய் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எக்ஸிட் போல்கள்படி, ஆம் ஆத்மி அறுதிப் பெரும்பான்மையுடன் டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணித்துள்ளது, அதே நேரத்தில் பாஜக படுமோசமாக தோற்கப்போகிறது என்றும் அவை தெரிவிக்கின்றன.
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பின்படி, ஆம் ஆத்மி கட்சி 59-68 இடங்களை வெல்ல உள்ளது, அதே நேரத்தில் பாஜக 2-11 இடங்கள் மட்டுமே பிடிக்க கூடும்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக கடுமையாக உழைத்தது. சுமார் 240 பாஜக எம்.பி.க்கள், 70 மத்திய அமைச்சர்கள் மற்றும் பல முதலமைச்சர்கள் கூட பல நாட்கள் பிரச்சாரம் செய்தனர். டெல்லியில் தேர்தலுக்கு முன்னதாக அமித் ஷா வீடு வீடாக பிரச்சாரங்களை நடத்தினார். எனவே, எக்ஸிட் போல் முடிவுகளால் அமித் ஷா அதிர்ச்சியடைந்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... பாஜகவின் கனவு டமால்- காங். அவுட்... எக்ஸிட் போல் முடிவுகள்
இதேபோல கெஜ்ரிவால் தனது இல்லத்தில், ஆம் ஆத்மி சீனியர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மின்னணு வாக்குப் பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்புகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி பிப்ரவரி 11 ஆம் தேதி, தேர்தல் ரிசல்ட் நாளில் அனைத்து எக்ஸிட் போல்களும் தவறானவை என நிரூபிக்கப்படும் என்று கூறியுள்ளார்.