பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை.. நக்ஸல்களின் பக்கம் பார்வையை திருப்பிய அமித்ஷா
டெல்லி: மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார்.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளன. இங்கு எப்போதும் இவர்களின் அச்சுறுத்தல் அதிகம் காணப்படுகிறது.
மாவோயிஸ்ட்களை ஒடுக்க அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2009-13-ஆம் ஆண்டுகளில் நக்ஸல் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 8.782 வழக்குகள் பதியப்பட்டன.
ஆனால் 2014-2018- ஆம் ஆண்டு வரை 43.4. சதவீதம் குறைந்து 4969 வழக்குகளாகியுள்ளன. 2009-2018ஆம் ஆண்டு வரை 1400 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் நடந்த 310 வன்முறை சம்பவங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பின்னர் பயங்கரவாதிகளை ஒடுக்க காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றினார்.
அது போல் அடுத்ததாக நக்ஸல்களின் ஆதிக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் இறங்க அமித்ஷா முடிவு செய்துள்ளார். நக்ஸல் ஆதிக்கம் உள்ள 10 மாநிலங்களின் முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.