குடியுரிமை சட்ட திருத்தம்.. இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாவா? அமித் ஷா பேச்சால் அவையில் கொந்தளிப்பு
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
டெல்லி: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
இன்று லோக்சபாவில் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலம் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் பாஜகவிற்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு மசோதா எளிதாக நிறைவேறிவிடும்.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இந்த மசோதாவை தாக்கல் செய்து அமித் ஷா விளக்கம் அளித்தார்.
என்ன பேச்சு
அமித் ஷா தனது பேச்சில், இந்த மசோதாவில் எந்த விதமான பாகுபாடும் காட்டப்படவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாட்டின் அகதிகள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். 3 நாடுகளிலும் மக்கள் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
மக்கள் எப்படி
இந்த மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளான மக்கள் மட்டுமே இந்தியாவில் குடியேற அனுமதிக்கப்படுவார்கள். மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். 2014க்கு முன் இந்தியாவிற்கு வந்த எல்லோருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.
குடியுரிமை
ஆனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது.ஆனால் இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது கிடையாது. ஜீரோ சதவிகிதம் கூட இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது கிடையாது. இந்த மசோதா தொடர்பான உங்கள் கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.
விவாதம்
நாம் இதில் ஆரோக்கியமான விவாதம் நடத்த வேண்டும். யாரும் அவையில் இருந்து வெளியேற வேண்டாம், என்று அமித் ஷா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமித் ஷாவின் இந்த பேச்சை திமுக, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து அமளி செய்து வருகிறது.