இந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா!
டெல்லி: இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பால் தாம் தெரிவித்த கருத்தில் இருந்து முதல் முறையாக பின்வாங்கி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இந்தி திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. கீழ் சில நாட்களுக்கு முன்னர் ஒரே தேசம் ஒரே மொழி; இந்தியே இந்தியாவின் பொதுமொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் இந்த திணிப்பு பேச்சுக்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
என்னது இந்தி பற்றி நான் அப்படி பேசினேனா.. அந்தர் பல்டியடித்த அமித் ஷா! பஞ்சாயத்து ஓவர்
தமிழகத்தில் போராட்டங்கள்
தமிழகத்தில் போராட்டங்கள் மையம் கொண்டிருக்கின்றன. குடியாத்தத்தில் திமுக இளைஞர்கள் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்தனர். ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் இன்று நடத்தப்பட்டன.
திமுக போராட்டம்
திமுக சார்பாக நாளை மறுநாள் இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென தமது கருத்தில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்.
இந்தி திணிப்பு அமித்ஷா விளக்கம்
இது தொடர்பாக அமித்ஷா தெரிவித்துள்ள விளக்கத்தில், தாம் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன்; இந்தியை திணிக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவே இல்லை.
2-வது மொழியாக இந்தி
தாய்மொழிக்குப் பின்னர் 2-வது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று மட்டுமே குறிப்பிட்டேன் என விளக்கம் அளித்திருக்கிறார்.
பின்வாங்கிய அமித்ஷா
மத்திய அரசின் பல்வேறு திணிப்புகளுக்கு தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதுதான் முதல் முறையாக தமது கருத்தில் இருந்து அமித்ஷா பின்வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.