உள்துறை இலாகா... 'இரும்பு மனிதராக' உருவெடுப்பாரா அமித்ஷா?
Recommended Video
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். அமித்ஷா வசம் உள்துறை இருப்பதால் பயங்கரவாத இயக்கங்கள், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றே கூறப்படுகிறது.
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா. அப்போது நடத்தப்பட்ட என்கவுண்ட்டர்கள் பெரும் சர்ச்சையாகின.
போலி என்கவுண்ட்டர்கள் மூலம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
மோடியுடன் தேசிய அரசியலில் அமித்ஷா
இது தொடர்பான வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அமைச்சர் பதவியையும் அமித்ஷா பறிகொடுக்க நேர்ந்தது. பின்னர் மோடியுடன் இணைந்து தேசிய அரசியலுக்கு வந்த அமித்ஷா, பாஜகவின் தலைவரானார்.
என்கவுண்ட்டர்கள் வழக்கு
கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்த போதும் அமித்ஷா அமைச்சரவையில் இணையவில்லை. அப்போதும் அமித்ஷா மீது போலி என்கவுண்ட்டர் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அமித்ஷாவுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த மகாராஷ்டிரா நீதிபதி மர்மமான முறையில் மரணித்துப் போனார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை போனது. இன்னொரு புறம் போலி என்கவுண்ட்டர்கள் வழக்குகளில் இருந்து அமித்ஷாவை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.இதனால் பெரும் சர்ச்சைகளும் வெடித்தன.
பாஜக மீண்டும் வெற்றி
இந்த சர்ச்சைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாடு முழுவதும் பாஜகவை வெல்ல வைக்க வேண்டும் என்கிற வியூகத்தால் அவர் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். தற்போதைய தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. வட இந்திய மாநிலங்கள் முழுவதும் பாஜக கொடியே பறந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் 15-வது பிரதமராக மோடி நேற்று பதவி ஏற்றார்.
அமித்ஷா வசம் உள்துறை
அவருடன் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இன்று அமைச்சர்களுக்காக துறைகள் அறிவிக்கப்பட்டன. இதில் அமித்ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சராகியிருக்கும் அமித்ஷா மதவாத பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பாஜகவின் தத்துவார்த்த எதிரிகளான மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படலாம்.
போராட்டங்களுக்கு தடை?
அத்துடன் அரசியல் வன்முறைகளை கையிலெடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக அமித்ஷாவின் உள்துறை சாட்டையை சுழற்றும். அமித்ஷா, அதேநேரத்தில் மக்கள் விரோத செயல் திட்டங்களுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்கள் மிக கடுமையாக ஒடுக்கப்படலாம். மத்திய அரசின் திட்டங்களை படைபலத்துடன் முழுவீச்சில் தடையின்றி செயல்படுத்த அமித்ஷா முயற்சிப்பார். குறிப்பாக தமிழகத்தில் மத்திய அரசின் அத்தனை திட்டங்களுக்கும் கடும் எதிர்ப்பு உள்ளது. அதனால் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதில் அமித்ஷா முனைப்பு காட்ட வாய்ப்புள்ளது.