6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா! மகுடம் சூடிய அமித் ஷா!
இந்தியாவின் மிகச்சிறந்த மத்திய அமைச்சர் அமித் ஷாதான் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிய வந்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் மிகச்சிறந்த மத்திய அமைச்சர் அமித் ஷாதான் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி வருகிறது. மத்திய அரசின் ஆட்சி கடந்த 6 மாதங்களில் எப்படி இருந்தது என்று ஆய்வு செய்யப்பட்டது. எல்லா வருடமும் இரண்டு முறை இந்த சர்வே எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்த முறை நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியாவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக 68% மக்கள் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இந்தியாவில் சிறப்பாக செயலாற்றும் மத்திய அமைச்சர்கள் குறித்தும் சர்வே நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக சிறந்த முதல்வர் இவரா? மூட் ஆப் நேஷன் சர்வேயில் வெளியான ஷாக்கிங் முடிவு!
யார் ?
அதன்படி இந்தியாவின் மிகச்சிறந்த மத்திய அமைச்சர் அமித் ஷாதான் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிய வந்துள்ளது. இவருக்கு ஆதரவாக மொத்தம் 42% மக்கள் வாக்களித்துள்ளனர். இவர் முதல்முறை இப்போதுதான் அமைச்சர் ஆகிறார்.உள்துறையில் இவர் செய்த சிறப்பான செயல்பாடு காரணமாக இவருக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இவரின் செயல்பாடு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏன் இப்படி
உள்துறை அமைச்சராக இவர் பல முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறார். மிக முக்கியமாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சிஏஏ சட்டம் கொண்டு வந்தது இவரின் சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அசாமில் என்ஆர்சி கொண்டு வந்ததும் இவரின் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து நாடு முழுக்க பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் அமித் ஷா ஈடுப்பட்டு வருகிறார்.
அடுத்து யார்
இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருக்கிறார். இவருக்கு 39% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதேபோல் இரண்டாவது இடத்தில் அமைச்சர் நிதின் கட்கரியும் இருக்கிறார். இவருக்கு 39% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது இருக்கிறார். இவருக்கு 26% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். பியூஸ் கோயல் 34%, ஸ்மிரிதி இராணி 22%, ரவி சங்கர் பிரசாத் 16% ஆகிய ஆதரவுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.
அமித் ஷா
அமித் ஷா முதலில் லோக்சபா தேர்தலில் நிற்பதே சந்தேகமாகத்தான் இருந்தது. அவர் இந்த லோக்சபா தேர்தலில் திடீர் என்று நின்று அமைச்சராக ஆனார். இதன் மூலம் அவர் முதல் முறை லோக்சபாவிற்குள் சென்றார். மிகப்பெரிய அமைச்சர் பதவியான உள்துறை அமைச்சர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. லோக்சபாவில் இவருக்கு தனி மரியாதை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி அளவிற்கு அமித் ஷாவிற்கும் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.