அமித்ஷா... செங்கோட்டை முதல் செளகார்பேட்டை வரை.. அல்லு தெறிக்கும் ஆச்சரிய அரசியல்!
Recommended Video
டெல்லி: 'மேரா தோஸ்த் அமித்ஷா! இந்த ஃப்ரெண்ட்ஷிப் டே-க்கு காஷ்மீரை கேட்டார், பிய்ச்சு கொடுத்துட்டேன். தசரா கொண்டாட்டத்துக்கு பாகிஸ்தானை கொடுக்கலாம்னு இருக்கேன். தோஸ்த்துக்கு என்னா சிரிப்பு பாருங்க!'- பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷாவை காட்டி இப்படி சொல்வதாக ஒரு மீம் வளைய வந்து கொண்டிருக்கிறது.
சாதாரண பார்வையில் பார்க்கப்போனால் ஆயிரத்தோறு மீம்ஸ்களில் இதுவும் ஒன்று. ஆனால் அரசியல் பார்வையில் பார்த்தால் இது மிகப்பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியைம் ஒரு சேர தருகிறது. அதென்ன அதிர்ச்சி?... மோடியாக மாறிக் கொண்டிருக்கிறாரா அமித்ஷா? என்பதுதான் அது.
விவகாரத்தை சற்று விரிவாகவே பார்ப்போம்....
ஐம்பத்து நான்கு வயதாகும் அமித்ஷாவின் சொந்த ஊர் மும்பை. கல்லூரி காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அணியான 'ஏபிவிபி'யில் அரசியல் பயின்றவர். பின் அரசியல் ரீதியாக குஜராத்துகு இடம் பெயர்ந்தவர் அங்கே எம்.எல்.ஏ.வானார்.
அமித் ஷா - மோடி
குஜராத்தின் முதல்வராக இருந்த கேசுபாய் படேல், திறமையற்ற நிர்வாகத்துக்காக நீக்கப்பட்டு, நரேந்திர மோடி அந்த இடத்தில் அமர்த்தப்பட்டார். இந்த சமயத்தில்தான் அமித் உடன் அவருக்கு மிகப்பெரிய நெருக்கம் உருவாகியது. இரண்டு பேரும் இணைந்து குஜராத்தில் உட்கட்சியில் முக்கிய தலைகளை ஓர்ங்கட்டிவிட்டு, ப்ரைம் லைனுக்கு வந்தனர்.
நனவாக்கிய அமித் ஷா
மோடியின் பனிரெண்டு ஆண்டு கால குஜராத் அரசாட்சியில் அமித்ஷா ஒரே நேரத்தில் பல துறைகளுக்கான மந்திரியாக இருந்திருக்கிறார். உள்துறை, சட்டம், சிறை, எல்லை பாதுகாப்பு என்று ஆரம்பித்து பனிரெண்டு துறைகளை கையில் வைத்திருந்தார். ஒரு அமைச்சர் ஒரு முதல்வருக்கு நிகரான பலத்துடன் வலம் வந்ததெல்லாம் இந்திய அரசியலுக்கு புதுசு. ஆனால் மோடியால் இது சாத்தியமாயிற்று, அமித் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை அப்படியானது.
சாமர்த்தியம்
மோடி கனவில் கண்ட அரசியல் மூவ்களை, அடுத்த நாளே நினைவில் சாத்தியப்படுத்தும் வல்லமையும், சாதுர்யமும் அமித்திடம் இருந்தது. அதேபோல் அமித்ஷாவுக்கும் ஒரு கனவு இருந்தது. அது, மோடியை இந்த தேசத்தின் மிக வல்லமை பொருந்திய அரசியல் தலைவராக மாற்றிக் காட்ட வேண்டும் எனும் எண்ணம். அதை மிக துல்லியமாக நிறைவேற்றியும் காட்டினார் 2014 நாடாளுமன்ற தேர்தல் மூலம்.
சர்ச்சைகளிலும் சிக்கினார்
இத்தனை அரசியல் சாதுர்யம் இருந்தாலும் கூட சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டவரல்ல அமித்ஷா. சொராபுதீன் எனும் கிரிமினலை, ராஜஸ்தானை சேர்ந்த மார்பிள் பிஸ்னஸின் பெரும் முதலைகளுக்காக, போலீஸ் அதிகாரிகளின் மூலம் போலி என்கவுண்டரை நடத்தி கொலை செய்ததாக ஒரு பெரும் புகார் படபடத்தது. ஆனால் ‘ஒரு உள்துறை அமைச்சராக, போலீஸ் அதிகாரிகளுடன் டச்சில் இருந்தேனே தவிர நான் காவல்துறையை ஒரு நாளும் தவறாக பயன்படுத்தியதில்லை. நான் உள்துறை பொறுப்பில் இருந்தபோதுதான் நாட்டிலேயே மிக குறைவான போலீஸ் என்கவுன்டர்கள் குஜராத்தில்தான் நடந்தது. எனவே இது காங்கிரஸின் திட்டமிட்ட சதி.' என்று அந்த புகாரினை அடியோடு மறுத்தார்.
குஜராத்துக்குள் நுழையத் தடை
இந்த வழக்கில் 2010 ஜூலையில் கைதாகி மூன்று மாதம் சிறையிலும் இருந்தார் அமித்ஷா. குஜராத்தினுள் நுழைய கூட அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் டெல்லியிலுள்ள ‘குஜராத் பவன்'-னில் ஒரு அறையில் வாழ்ந்து கொண்டு அனைத்து மூவ்களையும் செய்து மீண்டும் சட்ட அனுமதியுடன் குஜராத்தினுள் நுழைந்தார், 2012 சட்டமன்ற தேர்தலில் நாரண்புரா தொகுதியில் வென்றார். அமித்ஷாவுக்கு சிக்கலான கால கட்டங்களில் அவரிடமிருந்து சற்று விலகி இருந்தார் மோடி. அப்படி இருக்கச் சொன்னதே அமித்ஷாதான். காரணம், அவரது இலக்கு மோடியை பிரதமர் ஆக்குவதே.
உபியை சுருட்டினார்
மோடி பிரதமரான சில நாட்களில் அமித்ஷாவின் அரசியல் தேசிய லெவலுக்கு இடம் பெயர்ந்தது. மோடி - அமித்ஷா கூட்டணியில் சைலண்ட் பார்ட்னர்தான் ராஜ்நாத் சிங். அவர் மூலமாக உள் அரசியல் மூவ்களை செய்து அமித்ஷாவை பி.ஜே.பி.யின் பொது செயலாளர் ஆக்கினார் மோடி. அதன் பின் அமித் செய்த அரசியல் மாயாஜாலங்கள் அலாதியானவை. உத்திரபிரதேசத்தை சுருட்டி எடுத்துக் கொடுத்தார் பி.ஜே.பி.க்கு. காங்கிரஸ் அலறியது.
சொல்லிச் சொல்லி அடித்தார்
அதன் பின் ஒவ்வொரு மாநில பொது தேர்தல்களையும், இடைத்தேர்த்ல்களையும் சொல்லி சொல்லி அடித்தார். மோடி பிரதமரான பின் அமித்தின் இலக்கு, இந்திய வரைபடமானது பி.ஜே.பி.யின் வண்ணமாய் இருக்க வேண்டும் என்பதே. ஆனால் அமித்தின் கைகளுக்கு அடங்க மறுக்கும் மாநிலங்கள் உச்சத்திலிருக்கும் மேற்கு வங்கமும், அடியிலிருக்கும் தமிழ்நாடு மற்றும் கேரளமும்தான். ஷா நினைத்தால் இவற்றையும் காவியாக்கிட முடியும்! என்று கெத்தாக பேசுவார்கள் வட இந்திய பி.ஜே.பி. தலைவர்கள்.
மோடியின் பின் பலம்
2019 தேர்தலில் பி.ஜே.பி.யின் வெற்றியை தக்க வைத்து, இந்த தேசத்தின் லகானை மீண்டும் மோடியே எடுக்க வைத்ததில் ஷாவின் பங்கு மிக அலாதியானது. இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக தேசமெங்கும் அலை இருக்கிறது என்றார்கள். ஆனால் அதை தகர்க்க ஷா போட்ட ஸ்கெட்ச்கள் மிக அசாதாரணமானவை. பி.ஜே.பி.க்காக அரசியல் கன்சல்டன்ஸிகள் ஒருபுறம் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட, மறுபுறம் தனது பழைய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை கிராஸ் ரூட் லெவலில் கச்சிதமான சில வேலைகளை பார்க்க வைத்தார் அமித். அதன் விளைவுதான் இப்படியொரு முரட்டுத் தனமான பெரும்பான்மையை பி.ஜே.பி. பெற முடிந்தது.
பெஸ்ட் நண்பேன்டா
நண்பன் மோடியையும், கட்சியையும் வல்லமைக்கு கொண்டு வருவதற்காக கடந்த முறை அரசவைக்கு வெளியில் இருந்து உழைத்த அமித்ஷா, இந்த முறை தேசிய அமைச்சரவையினுள் நுழைந்திருக்கிறார். அதுவும் ‘ராஜ்யசபா' எனும் குறுக்கு வழியில் இல்லாமல் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு, அபரிமிதமான மக்கள் செல்வாக்குடன் லோக்சபா வழியே கெத்தாக நாடாளுமன்றத்தினுள் நுழைந்திருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய கெளரவமாக இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் பதவியை வழங்கினார் மோடி.
காஷ்மீரில் அதிரடி
உள்துறை அமைச்சரான அமித்ஷா இப்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தீர்மானத்தை ரத்து செய்திருப்பதன் மூலம் சர்வதேசத்தை சேர்ந்த அரசியல் பார்வையாளர்களை தன் பக்கம் திருப்பியிருக்கிறார். உண்மையில் அவர்களுக்கு இது நாள் வரை அமித்ஷாவை ‘மோடி அரசியல் முகாமின் சாணக்கியர்' ஆகத்தான் தெரியும். ஆனால் நாடாளுமன்ற்த்தின் மைய மண்டபத்தில் நின்று "ஆம்! பாகிஸ்தான் மற்றும் சீனா வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மீட்டெடுப்போம். காஷ்மீர் மிக முழுமையாக இந்தியாவுக்கே சொந்தம்." என்று கர்ஜித்திருப்பதன் மூலம் சர்வதேச அரசியலரங்கில் ஒரு சத்ரியனாகவும் பார்க்கப்பட்டிருக்கிறார்.
உலகப் புகழ்
ஒரே நாளில், ஒரே கையெழுத்தில், ஒரே உரையில் சர்வதேசமெங்கிழும் மோடிக்கு இணையாக பார்க்கப்பட்டுவிட்டார் அமித்ஷா. அகில உலகமெங்கும் இருந்து அவருக்கு பாராட்டுக்களும், விமர்சனங்களும் ஒரு சேர வந்து விழுகின்றன. மோடி கம்பீரம் மற்றும் சர்ச்சைகளோடு குளோபல் லீடராக படிப்படியாக வளர்ந்தார். ஆனால் அமித்ஷாவோ ஒரே நொடியில் வளர்ந்துவிட்டார்.
இப்போது மீண்டும் தலைப்புக்கே வருவோம்....'மோடி ஆகிறாரா அமித்ஷா?'
- ஜி.தாமிரா