வங்கதேச அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை இந்திரா வழங்கியதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? அமித்ஷா
டெல்லி: 1971-ம் ஆண்டு வங்கதேச அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வழங்கியதும் கூட அரசியல் சாசனத்துக்கு எதிரானதுதானா? என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை இன்று அமித்ஷா தாக்கல் செய்தார். இம்மசோதாவை காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
அப்போது குறுக்கிட்டு அமித்ஷா பேசியதாவது:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசியல் சாசனத்தின் எந்த ஒரு பிரிவுக்குமே எதிரானது அல்ல. 1971-ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்திரா காந்தி நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்போது அவர் அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். வங்கதேச அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்போது ஏன் பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை?
குடியுரிமை சட்ட திருத்தம்.. இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாவா? அமித் ஷா பேச்சால் அவையில் கொந்தளிப்பு
இப்போது நாங்கள் மேற்கொள்வது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றால் அன்று இந்திரா காந்தி மேற்கொண்டதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதுதானா?
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதுவதே இல்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.