என்ன இப்படி சொல்லிவிட்டார் அமித்ஷா.. தடுப்பு காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் விஷயத்தில் தான்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை அந்த மாநில உள்ளூர் அரசு தான் விடுவிக்க வேண்டும். இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகும் இன்னும் அங்குள்ள அரசியல் தலைவர்கள் தடுப்பு காவலில் தான் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் காஷ்மீர் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று லோக்சபாவில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசிடம் இன்று கேள்வி எழுப்பினார்.
ஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் பற்ற வைத்த நெருப்பு- குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
உள்ளூர் நிர்வாகம்
இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு-காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முப்தி முகமது, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட மூன்று முன்னாள் முதல்வர்கள் உட்பட அரசியல் தலைவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவுகளை உள்ளூர் நிர்வாகம்தான் எடுக்கும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றும் தெரிவித்தார்.
மாநிலங்களவையில்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான ஆயுத திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளார்.
நேற்று நிறைவேற்றம்
இந்த மசோதா லோக்சபாவில் திங்களன்று நிறைவேற்றப்பட்டது, இது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருத்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை தயாரிப்பவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க முற்படுகிறது.
சிறப்பு சலுகைகள்
60 ஆண்டு கால ஆயுத சட்டத்தில் சில மாற்றங்கள் இதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் விளையாட்டு வீரருக்கு தேவைப்படும் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க சிறப்பு சலுகைககள் வழங்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
நிறைவேறியது
லோக்சபாவில் திங்கள்கிழமை சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்த) மசோதா 311 வாக்குகள் ஆதரவுடனும், 80 வாக்குகளை எதிராக பெற்றும் நிறைவேற்றியது. நேற்று மசோதாவை தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக இல்லை என்றும், அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பின்னர் வேதனையான வாழ்க்கை வாழ்வதற்கு மக்களுக்கு அளிக்கப்படும் நிவாரணம் என்றும் கூறினார். இந்த மசோதா பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறது.