எப்படி தவறவிட்டீர்கள்? கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்னும் கைது செய்யப்படாதது ஏன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்னும் கைது செய்யப்படாதது ஏன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் மிக தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
நேற்று மாலையில் இருந்து ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் தேடி வருகிறார்கள். ஆனால் ப. சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது இன்னும் சிதம்பர ரகசியமாக இருக்கிறது.
எங்கே இருக்கிறார்
நேற்று மாலை டெல்லி ஹைகோர்ட் ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது. சுப்ரீம் கோர்ட்டும் ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்தது. இதன்பின்தான் ப. சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
உத்தரவு இல்லை
ஆனால் அமலாக்கப்பிரிவிடம் இருந்து இது தொடர்பாக உறுதியான உத்தரவும் கிரீன் சிக்னலும் கிடைக்கவில்லை. அப்போது கிடைத்து இருந்தால் ப. சிதம்பரத்தை கோர்ட்டில் வைத்தே அதிகாரிகள் நேற்று மாலையே கைது செய்து இருக்க முடியும். டெல்லி வீட்டில் நேற்று மாலை 6 மணி வரை சிதம்பரம் இருந்தார். அப்போது கூட கைது செய்து இருக்கலாம்.
நிர்மலா சீதாராமன்
தற்போது அமலாக்கத்துறை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ப. சிதம்பரம் கைது செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது நிர்மலாவிற்கும் மிகவும் தாமதமாகவே தெரிந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இந்த விஷயம் தெரிந்ததும் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளை கோபமாக கடிந்து இருக்கிறார். நிர்மலா சீதாராமனும் தனது அதிகாரிகளை வேகமாக செயல்பட கூறியுள்ளார்.
என்ன ஆலோசனை
நேற்று மாலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகளும், அமித் ஷாவின் உள்துறை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர். ஏன் கோர்ட்டிலேயே அவரை கைது செய்யவில்லை என்று உள்துறை அதிகாரிகள் அமித் ஷா சார்பாக கேட்டுள்ளனர். இந்த அழுத்தத்திற்கு பின்புதான் நேற்று ப. சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அப்போது அங்கு ப. சிதம்பரம் இல்லை.
இப்போது இல்லை
இந்த நிலையில் இன்றும் இரண்டு முறை முயன்றும் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை. அவரின் மனுவில் தவறு இருப்பதாக கூறி பதிவாளர் ஏற்கவில்லை. இதனால் இந்த வழக்கில் இன்று கண்டிப்பாக ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த முறை அமித் ஷா கண்டிப்பாக வாய்ப்பை நழுவ விட மாட்டார் என்கிறார்கள்.