எமர்ஜென்சியை அமல்படுத்திய காங். சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசலாமா? அமித்ஷா காட்டம்
டெல்லி: எமர்ஜென்சியை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசலாமா? என ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாக கேள்வி எழுப்பினார்.
உபா சட்ட திருத்த மசோதா மீது ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உபா சட்ட திருத்தங்களை முன்வைத்து பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து அமித்ஷா பேசியதாவது:
உபா சட்ட திருத்தத்தின் படி எந்த ஒரு தனிநபரின் உரிமையும் பாதிக்கப்படாது. அதற்காக அத்தனை அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
எமர்ஜென்சியின் போது இந்த நாட்டில் என்ன நடந்தது? அத்தனை ஊடகங்களும் தடை செய்யப்பட்டன. அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். 19 மாதங்களாக நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லை.
தனி நபரை தீவிரவாதி என்பதா.. உபா சட்டத் திருத்தத்திற்கு ராஜ்யசபாவில் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு
இப்போது அந்த காங்கிரஸ் கட்சியினர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசுகின்றனர்.. நீங்கள் உங்கள் கடந்த காலங்களைத் திரும்பிப் பாருங்கள்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது உபா சட்ட திருத்தங்களை ஆதரித்தோம். பயங்கரவாதத்துக்கு மதம் என்பதே கிடையாது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்துக்கு எதிரானது. பயங்கரவாதம் என்பது தனிப்பட்ட அரசுக்கோ அல்லது தனிநபருக்கோ எதிரானது அல்ல.
உபா சட்ட திருத்த மசோதாவுக்கு முழுமையான நாம் ஆதரவு தெரிவித்தால் நமது விசாரணை அமைப்புகள் சர்வதேச அளவில் அதிக அதிகாரங்களுடன் செயல்பட வாய்ப்பு ஏற்படும். ஒரு பயங்கரவாத இயக்கமே தடை செய்யப்பட்ட பின்னரும் தனிநபரை பயங்கரவாதி என ஏன் அறிவிக்க வேண்டும் என கேல்வி எழுப்புகிறார் ப. சிதம்பரம்.
தனிநபர்களையும் பயங்கரவாதி என அறிவிக்காவிட்டால் அவர்களது நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் போகும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.