பட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை? சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா
டெல்லி: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என தேர்தலுக்கு முன்னரே பிரதமர் மோடியும் தாமும் பேசியதை சிவசேனா அப்போது ஏன் எதிர்க்கவில்லை என உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது சிவசேனா முன்வைக்கும் புதிய நிபந்தனைகளை ஏற்க முடியாது எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை கேட்டது சிவசேனா. இதை பாஜக ஏற்க மறுத்தது. இதனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது என்சிபி- காங்கிரஸுடன் இணைந்து புதிய அரசை அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது . மேலும் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அமித்ஷா அளித்த பேட்டி: மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்னரே பிரதமரும் நானும் பல முறை தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என பேசியிருக்கிறோம். அப்போது யாருமே அதை எதிர்க்கவில்லை.
தற்போது தேர்தலுக்குப் பின் அதனை எதிர்க்கின்றனர். மேலும் புதிய நிபந்தனைகளுடனும் சிவசேனா வருவதை ஏற்கவும் முடியாது.
மகாராஷ்டிராவைப் போல வேறு எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்க 18 நாட்கள் அவகாசம் தரப்படவில்லை. சட்டசபையின் பதவி காலம் முடிவடைந்ததால் கட்சிகளை ஆளுநர் கோஷ்யாரி அழைத்தார்.
சிவசேனாவோ, காங்கிரஸ்- என்சிபியோ ஆட்சி அமைக்க உரிமை கோரவும் இல்லை. தற்போதும் கூட பெரும்பான்மை இருப்பதாக கருதும் கட்சிகள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.