சந்திப்போமா, கொஞ்சம் சிந்திப்போமா.. அமித் ஷா அழைப்பு.. டூ லேட் என எம்.பிக்கள் புலம்பல்!
Recommended Video
டெல்லி: 5 மாநிலத் தேர்தல் கொடுத்த அடி பாஜகவை ரொம்பத்தான் புரட்டிப் போட்டுள்ளதாக தெரிகிறது. இதுவரை நினைவுக்கு வராத விஷயமெல்லாம் இப்போது அந்தக் கட்சிக்கு பளிச் பளிச் என நினைவுக்கு வந்து கீழே இறங்கி வர ஆரம்பித்துள்ளது.
எங்களுடைய துயரத்துக்கெல்லாம் காரணம் இதுதான் என்று மக்கள் எதையெல்லாம் எடுத்து எடுத்துக் கூறினார்களோ அதையெல்லாம் பாஜக அரசு சட்டையே செய்யவில்லை. புறம் தள்ளியே வந்தது. இன்று ஜிஎஸ்டி வரியைக் குறைத்துள்ளது. விவசாயிகள் குறித்தும் கவலை காட்ட ஆரம்பித்துள்ளது.
இப்போது பாஜக தலைமை அடுத்து ஒரு காரியத்தில் இறங்கியுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தநது கட்சி எம்பிக்களுடன் பேச ஆரம்பித்துள்ளார். வாங்க, என்ன குறை உள்ளது சொல்லுங்க என்று கேட்க ஆரம்பித்துள்ளாராம். தேர்தல் தோல்வியால் மனம் துவண்டு போய் விடக் கூடாது என்று கூறி வருகிறாராம்.
ஆனால் இதை பாஜக எம்.பிக்கள் ரசிப்பதாக தெரியவில்லை. நான்கு வருடத்தை முழுசாக முழுங்கி விட்டு இப்போது வந்து பேசி என்ன பயன், இது ரொம்ப தாமதம். மக்களிடமிருந்து பாஜக ரொம்பவே அந்நியப்பட்டுப் போய் விட்டது. நமக்கு எதிரான நிலையை நாமளே ஏற்படுத்தி விட்டோம் என்று புலம்புகிறார்களாம் எம்.பிக்கள்.
எம்.பிக்களுக்கு உத்தரவு
எம்.பிக்களை பகுதி பகுதியாக அழைத்துப் பேசி வரும் அமித் ஷா, மக்களிடம் செல்லுங்கள், மக்கள் பிரச்சினைகளை கண்டறியுங்கள். அதை நிவர்த்தி செய்ய முயலுங்கள். பிரதமர் மோடியின் அரசு நிறைவேற்றியுள்ள, செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் விளக்குங்கள் என்று கூறி வருகிறாராம்.
ஒரு வாரமாக
டிசம்பர் 20ம் தேதி தொடங்கி இந்த சந்திப்பு நடந்து வருகிறது. ஜனவரி 4ம் தேதி வரை இது தொடரவுள்ளது. எம்.பிக்கள், முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார் அமித் ஷா. அப்போது அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசுகிறாராம் அமித் ஷா. மேலும் எம்.பிக்களிடம் குறைகளையும் கேட்கிறாராம் அமித் ஷா. லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளையும் அவர் வரவேற்கிறாராம்.
இதுவரை இந்தி மட்டும்
இதுவரை டெல்லி, உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநில எம்.பிக்களை சந்தித்துள்ளார் அமித் ஷா. படிப்படியாக அனைத்து மாநில பாஜக எம்.பிக்களையும் அவர் சந்திக்கவுள்ளார். தமிழ்நாட்டில் பொன். ராதாகிருஷ்ணன் மட்டுமே உள்ளார் என்பதால் அவருடன் தமிழக பாஜக நிர்வாகிகளையும் சேர்த்து அழைத்து அவர் பேசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திகள் தயாராகிறது
எம்.பிக்களின் சந்திப்பின்போது அவர்கள் கூறும் உருப்படியான யோசனைகள், தேர்தல் உத்தியில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனால் ஒவ்வொருவரும் கூறுவதை கவனமுடன் கேட்டுக் கொள்கிறாராம் அமித் ஷா. பெரும்பாலான எம்.பிக்கள், நாம் மக்களிடமிருந்து விலகிப் போய் விட்டோம் என்றுதான் குறையாக கூறி வருவதாக தெரிகிறது.
பேச்சைக் குறைத்தார்
முன்பெல்லாம் இதுபோன்ற கூட்டங்களில் அமித் ஷாதான் அதிக நேரம் பேசுவார். அவர் பேசுவதை மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது அவர் பேசுவதை குறைத்து விட்டு எம்.பிக்களை பேசச் சொல்கிறார். உன்னிப்பாக கவனிக்கிறாராம்.
இது தாமதம்
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு எம்.பி. தி பிரின்ட் இணையத்துக்கு அளித்த பேட்டியின்போது, நாங்கள் பேசுவதை அமித் ஷா கேட்டுக் கொள்கிறார். ஆனால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. இந்த கூட்டம் ரொம்பத் தாமதமானது. கிட்டத்தட்ட நான்கு வருட தாமதம். இந்தக் கூட்டத்தால் நிலைமையை மாற்ற முடியும் என்று தெரியவில்லை என்றார் விரக்தியுடன்.
இறங்கி வாங்க
இன்னொரு எம்.பி. கூறுகையில், இதுவரை கட்சித் தலைமைப் பொறுப்புகளில் இருப்போர் எங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்த தேர்தல் தோல்விதான் எங்களை நோக்கி அவர்களை வர வைத்துள்ளது. எங்களைப் போலவே மக்களிடமிருந்தும் விலகியே உள்ளது. இதுதான் தோல்விக்கான முக்கியக் காரணம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. நாங்கள் கூறிய யோசனைகளை ஏற்பார்களா என்றும் தெரியவில்லை என்றார்.