இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்
Recommended Video
டெல்லி: இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு பாகுபாடு காட்டவில்லை என்று, ராஜ்யசபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ராஜ்யசபாவில் மசோதா இன்று அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர்.
இந்த விவாதங்களுக்கு பதிலளித்து, அமித் ஷா இன்று மாலை 6.30 மணியளவில் உரையாற்ற தொடங்கினார். இந்த பதில் உரை, இரவு 7.50 மணி வரை நீடித்தது. அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து சிறுபான்மையினர் விரட்டப்படுகிறார்கள். அவை அனைத்தும் இஸ்லாமிய நாடுகள், இந்த நாடுகளில் முஸ்லிம்களை மத அடிப்படையில் கொடுமைப்படுத்தும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, இந்த நாடுகளில் மத துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த மசோதா முன்மொழிகிறது.
மத ரீதியாக நாட்டை பிரித்திருக்காவிட்டால் குடியுரிமை மசோதாவுக்கு அவசியமே இல்லை.. அமித் ஷா ஆவேச பேச்சு
இலங்கையிலிருந்து வரும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இப்போது, மற்ற மூன்று நாடுகளிலிருந்து வருபவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டம் உருவாகுகிறது.
இலங்கை தமிழர்களுக்கு பாகுபாடு இல்லை.முன்னுரிமை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அகதிகளுக்கு இடமளிக்க நாடு சார்ந்த சட்டங்களை நாம் இந்த அவையில் எப்போதுமே இயற்றி வந்துள்ளோம். எனவே, வைகோ, திருச்சி சிவா உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு இதுவே எனது பதிலாக இருக்கும்.
இந்த மசோதா யாருடைய உணர்வையும் புண்படுத்தவோ அல்லது எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களையும், வருத்தப்படவோ கொண்டுவரவில்லை. இந்த நாட்டின் சிறுபான்மையினர் அநீதிக்கு ஆளாக மாட்டார்கள்.
சட்டப் பிரிவு 370 ரத்து, முத்தலாக் மசோதா போன்றவை முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல. பெண்களுக்கு உரிமைகள் இல்லையா? 370 ரத்து செய்யப்பட்ட பின்னரும் காஷ்மீர் அமைதியாகவே இருந்தது. அதேபோல், குடியுரிமை சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது இல்லை.
சிவசேனா நேற்று இந்த மசோதாவை ஆதரித்தது. இன்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ஒரு இரவு நேரத்திற்குள் என்ன நடந்தது என்று அவர்கள் மகாராஷ்டிரா மக்களிடம் சொல்ல வேண்டும்.
ரோஹிங்கியாக்கள் ஏன் மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்று கேட்கிறீர்கள். ரோஹிங்கியாக்கள் நேரடியாக இந்தியாவுக்கு வருவதில்லை, அவர்கள் வங்கதேசம் சென்று பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள்.
இந்திய நாட்டின் பிரிவினைக்கு காரணம் ஜின்னாதான் என்பது முழு நாட்டிற்கும் தெரியும். அவருடைய கோரிக்கையின் காரணமாக மத ரீதியாக நாடு பிரிக்கப்பட்டது. ஆனால் நான் கேட்பதெல்லாம் காங்கிரஸ் ஏன் அதற்கு ஒப்புக் கொண்டது? மதத்தின் அடிப்படையில் பிரிவினை ஏன் செய்யப்பட்டது? இவ்வாறு அமித் ஷா பேசினார்.