7ம் தேதி அமித் ஷா தமிழகம் வருவதற்குள்.. 'அந்த கூட்டணி' க்ளீயர் ஆகணும் - தகவல் கலந்த உத்தரவு
டெல்லி: தேர்தல் பரப்புரைக்காக, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் ஏப். 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 2 அன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு ஒரு மாத காலமே இருப்பதால், திமுக, அதிமுக தொடங்கி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
மும்பையில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதற்கு சீனாவின் நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர் விளக்கம்
தொகுதிப் பங்கீடு
இந்த நிலையில், தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய அதிமுக - பாஜக இடையே 4ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியிருக்கிறது. சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் பங்கேற்றுள்ளனர். பாஜக தரப்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றுள்ளனர்.
உத்தரவுகள்
இந்த சூழலில், தேர்தல் பரப்புரைக்காக மார்ச்.7ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார். அவர் வருவதற்கு முன்பே கூட்டணி தொடர்பாக பல விஷயங்களில் க்ளீயர் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று டெல்லி தரப்பில் இருந்து உத்தரவுகள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமமுக இணைப்பு
குறிப்பாக, டிடிவி தினகரனின் அமமுகவுடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக, கடந்த ஞாயிறு இரவு சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொகுதிப் பங்கீடு குறித்து பெரிதாக பேசாமல், அமமுக இணைப்பு குறித்து தான் அமித் ஷா அதிகம் பேசியதாக தகவல்கள் கசிந்தன.
க்ளீயர் பண்ணுங்க
டெல்டா மாநிலங்களில் வெற்றிப் பெற சசிகலா அணி துணை வேண்டும் என்பதை உளவுத்துறை ரிப்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு அமித் ஷா வலியுறுத்த, எடப்பாடி தரப்பு முற்றிலும் மறுத்துவிட்டதாகவும், ஓ.பி.எஸ் தரப்போ, 'சசிகலா தயவு நமக்கு நிச்சயம் தேவை' என்று சொல்லியதாக தெரிகிறது. இந்த நிலையில் தான், 7ம் தேதி தமிழகம் வருவதற்குள் அமமுக லைன் க்ளீயர் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற தகவல் கலந்த உத்தரவு டெல்லியில் இருந்து வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.