லோக்சபாவில் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. ஆதரவு 311, எதிர்ப்பு 80 ஓட்டுக்கள்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் இன்று நிறைவேறியது.
பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல் காரணமாக வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா செய்தது. இந்த மசோதா கடந்த முறை மோடி ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை.
மோடி அரசு
இதனிடையே பிரதமர் மோடி அரசின் முதல் ஐந்துஆண்டு பதவி காலம் முடிந்து விட்டதால் மசோதா காலாவதியானது. இதையடுத்து புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டுவந்தது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒபி ரவீந்திநாத்
இந்த மசோதா இன்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ஓபி ரவீந்திரநாத் குடியுரிமை மசோதாவை அறிமுகம் செய்ய ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாகுபாடு இல்லை
விவாதத்தின்போது, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை என லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். திமுக, சிவசேனா உட்பட பல கட்சி எம்பிக்களும் பேசிய பிறகு, இரவு சுமார் 10.40 மணிக்கு அமித் ஷா, விவாதங்களுக்கு பதிலளித்து பேசினார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் முஸ்லீம் நாடுகள். எனவே, இந்த நாடுகளில் மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அவர்களுக்கு இந்தியா பாதுகாப்பு வழங்கும் என்று அமித் ஷா விளக்கம் அளித்தார்.
வாக்கெடுப்பு
இதையடுத்து, சட்டத்திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பிறகு டிவிஷன் முறையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. எனவே சட்ட மசோதா நிறைவேறியது.
2014-டிசம்பர் 31
குடியுரிமை திருத்த மசோதாவின் படி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது.