பேசாம இருக்க மாட்டீங்களா.. மத்திய அமைச்சருக்கு அமித் ஷா விட்ட டோஸ்
டெல்லி: மத்திய விலங்குகள் நலத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா எச்சரித்துள்ளார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார், லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்படத்தை அமைச்சர் கிரிராஜ்சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இதே நவராத்திரி திருவிழாவில் ஒரு உணவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படமாக இது இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நாம் ஏன் நம் நம்பிக்கையை மறைத்துக் கொள்ள வேண்டும். ஏன் இந்தப் பாசாங்கு? என்று டிவீட் செய்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த அவர் கிரிராஜ் சிங் இப்படிப்பட்ட கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவார், நீங்களும் செய்தியாக்கலாம் என்று கூறியிருந்தார். இது பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் பரபரப்பை கிளப்பியது.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் டிவிட்டர் பதிவு சர்ச்சையானதை அடுத்து பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கிரிராஜ் சிங்கை எச்சரித்துள்ளார். இனிமேல் இதுபோன்ற பதிவுகளை வெளியிட கூடாது என்று அமித்ஷா எச்சரித்துள்ளார்.
கிரிராஜ்சிங் இதுபோன்று சர்ச்சை கருத்துகளை வெளியிடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2015 ம் ஆண்டு கிரிராஜ் சிங் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சராக இருந்தபோது ஹாஜிப்பூரில் பேசுகையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நைஜீரிய பெண்ணை திருமணம் செய்திருந்தால், அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்றிருக்குமா, சோனியா காந்தி வெள்ளை நிறத்தவராக இல்லாமல், கருப்பாக இருந்திருந்தால், அவரைத் தலைவராக ஏற்றிருப் பார்களா? என்று பேசியிருந்தார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கிரிராஜ் மன்னிப்பு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த சோனியாகாந்தி இப்படிப்பட்ட குறுகிய மனப்பான்மை கொண்டவருக்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு முன்னதாக 2014, ஏப்ரல் 19 அன்று நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசிய கிரிராஜ் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்றமும் அவரை கண்டித்தது. அதோடு அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.
அதன் பின்னர் 2016ஆம் ஆண்டில், முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர், என்று மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இப்படியாக பாஜக எம்.பி.யும் சாமியாருமான சாக்சி மகராஜ் போல இவரும் சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல.