பயங்கரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றுகிறார் அமித்ஷா?
டெல்லி: வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு கடந்த திங்கள்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து 35 ஏ சட்டப்பிரிவும் தானாகவே நீங்கியது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.
இதன் மூலம் இனி ஜம்மு காஷ்மீருக்கு தனிக் கொடி இல்லை. யார் வேண்டுமானாலும் காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்க முடியும். நாடாளுமன்றத்தில் விதிக்கும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கு பொருந்தும்.
கெடுபிடிகள்
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. வரும் 15-ஆம் தேதி வரை அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கும் என தெரிகிறது.
அமித்ஷா
இந்த நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சுதந்திர தினம் முடியும் வரை அங்கேயே இருக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் பயம்
இந்த நிலையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக அமித்ஷா அங்கு செல்வார் என தெரிகிறது. அப்போது அவர் சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை ஏற்றுவார் என தெரிகிறது. இதுகுறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், அமித்ஷாவின் காஷ்மீர் பயணம் என்பது பாதுகாப்பு விஷயமாகும்.
முன்கூட்டியே
ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் அமித்ஷா பயணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட முடியாது. எனவே அவர் பயணமாகும் தேதி குறித்தும் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது.
தேசியக் கொடி
அமித்ஷாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை தகவல்கள் கூறுகின்றன. அமித்ஷாவும் அவரது வழிகாட்டியுமான பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் தேசியக் கொடியை இருவரும் ஏற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு
கடந்த 1992-ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையிலும் முரளி மனோகர் ஜோஷி, மோடியுடன் சென்று லால் சவுக்கில் கொடியேற்றினார். ஸ்ரீநகரின் லால் சவுக் என்பது முக்கிய வர்த்தக மையம என்பதால் அங்கு கடந்த 1948ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கொடியேற்றினார்.