அரசியல் கட்சியாகிறது அமமுக.. தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு முறைப்படி விண்ணப்பம்
டெல்லி: அமமுகவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்குமாறு டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.
அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இதற்கிடையே அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு தினகரன் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன்காரணமாக அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை டிடிவி தினகரன் அறிவித்தார்.
செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த தினகரன்.. ஷாகுல் ஹமீதுவை களமிறக்கி ஸ்மார்ட் மூவ்!
உச்சநீதிமன்றம்
ஆனால் அமமுகவுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டிடிவி தினகரனின் இயக்கத்துக்கு ஒரே சின்னம் ஒதுக்க உத்தரவிட்டது. இதன்படி பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.
அரசியல் கட்சியாக
முன்னதாக அமமுகவை அரசியல் இயக்கமாக பதிவு செய்யாததால் ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் தேர்தல் ஆணையத்தில் அமமுகவை பதிவு செய்ய தினகரன் முடிவு செய்தார்.
அன்பழகன் துணை தலைவர்
இதன்படி அண்மையில் அமமுக நிர்வாகிகளால் டிடிவி தினகரன் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்பழகன் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அரசியல் கட்சியாக அமமுகவை மாற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சிக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
டிடிவி தரப்பில் மனு
இந்த பட்டியலுடன் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் அரசியல் கட்சியாக அமமுகவை பதிவு செய்யுமாறு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவினை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.