மத்திய அரசின் தொடர் அடக்குமுறை.. இந்தியாவில் பணிகளை நிறுத்துகிறோம்.. அம்னெஸ்டி அறிவிப்பு
டெல்லி: மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளை சர்வதேச அளவில் கண்காணித்து வரும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு, இந்தியாவில் பணிகளை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. வங்கி கணக்கை இந்திய அரசு முடக்கி உள்ளதாகவும், அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், தொடர்ச்சியான அடக்குமுறை நடப்பதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து அம்னெஸ்டி சர்வதேச அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்திய அரசு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய வங்கிக் கணக்குகளை முழுமையாக முடக்கியது, இதனால் நாங்கள் மேற்கொண்டுள்ள அனைத்து வேலைகளையும் நிறுத்துகிறோம்.
அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் மனித உரிமை அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு அடக்குமுறைக் கொள்கைகளின் நீட்சியே எங்கள் மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளது. இந்திய அரசின் செயல்களை சூனிய வேட்டை என்றும் அந்த அமைப்பு விமர்சித்துள்ளது.
டெல்லி கலவரம்
கடந்த பிப்ரவரியில் தேசிய தலைநகரான டெல்லியில் ஏற்பட்ட கலவரங்களுக்கு டெல்லி காவல்துறை உடந்தையாக இருப்பதாக அமைப்பு குற்றம் சாட்டிய ஒரு மாதத்திற்குப் பிறகு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஒடுக்குமுறை
இது தொடர்பாக அம்னெஸ்டி அமைப்பின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறும்போது, "கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் அமைப்பு மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறை நடந்து வருகிறது. வங்கி கணக்குகளை முழுமையாக முடக்குவது "தற்செயலானது அல்ல".. அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு முகமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தன. இதற்கு காரணம் என்னவென்றால் நாங்கள மத்திய அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதுதான் காரணம்
மனித உரிமை மீறல்
அண்மையில் நடந்த டெல்லி கலவரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து காவல்துறை மற்றும் இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்ய முடியாத அளவு இங்கு அநீதி நிலவுகிறது. அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதைத் தவிர எங்கள் அமைப்பு ஒன்றும் செய்துவிடவில்லை, ஆனால் மறுப்பையே, எதிர்ப்பையே உறையச் செய்ய இங்கு முயற்சி நடக்கிறது.
ஆதாரங்கள் இல்லை
எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லாமல், குற்றங்களை செய்யும் நிறுவனங்களை போன்று மனித உரிமை அமைப்புகளை நடத்துவது, எதிர்ப்புத் தெரிவிக்கும் தனிநபர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவது என்பது விமர்சனக் குரல்களை ஒடுக்குவதும் அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்குதாகும்.
நிதி மோசடியாக சித்தரிப்பு
அம்னெஸ்டி அமைப்பு சர்வதேச சட்டம், இந்தியச் சட்டங்களுக்கு உடன்பட்டே முறைசார்ந்தே செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஒரு லட்சம் இந்தியர்கள்தான் இதில் நன்கொடை பங்களிப்பு செய்திருக்கிறார்கள். எனவே இவை அந்நிய நிதிப்பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்துடன் தொடர்புடையது அல்ல. சட்டரீதியான நிதித் திரட்டலை அரசு தற்போது நிதி மோசடியாகச் சித்தரிக்கிறது. மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் அரசின் செயலின்மையையோ மீறல்களையோ சுட்டிக்காட்டினால் இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
என்ன காரணம்
எனவே, அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்கிறது. அம்னெஸ்டி அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க் குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்குக் காரணம்" இவ்வாறு கூறினார்.