இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு கூடுதலாக 30,000 பேர் ஹஜ் பயணம் செல்லலாம்.. ஒப்புதல் அளித்தது சவுதி
டெல்லி: இந்தியாவில் இருந்து வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த, சவுதி அரேபிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதன் மூலம் மெக்கா புனித பயணம் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையிலிருந்து 30,000 கூடுதலாக உயர்ந்துள்ளது.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சவுதி இளவரசர் பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சல்மான் உறுதி அளித்தார்.
ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். உடல் நலமும் பணவசதியும் உள்ள இசுலாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் செய்ய வெண்டும் என அம்மார்கத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒழித்தல் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தியா - சவுதி தரப்பு பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விஜய் கோகலை, தற்போது நாடு முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் 1.70 லட்சம் முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.
இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரிக்க பிரதமர் மோடி, சவுதிஅரேபிய இளவரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட சவுதி இளவரசர், கூடுதலாக 30 ஆயிரம் இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் புனித யாத்திரை வர அனுமதி அளிக்கப்படும் என உறுதி கூறியுள்ளார்.
இந்த முக்கியமான முடிவால் இனி இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இது தவிர சுற்றுலாவை மேம்படுத்த சவுதி - இந்தியா இடையே அதிகளவில் விமானங்களை இயக்க இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
ஹஜ் புனித பயணத்துக்கு ஆண்களின் துணையின்றி பெண்களுக்கு செல்ல கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து 1,300 பெண்கள் தனியாக ஹஜ் சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.