மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன் நியமனம்
டெல்லி: மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் கே.வி. சுப்பிரமணியன். மூன்று ஆண்டுகள் இப்பதவி வகித்த கே.வி. சுப்பிரமணியன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். ஆராய்ச்சி படிப்புகளைத் தொடருவதற்காக கே.வி.சுப்பிரமணியம் பதவி விலகினார்.
கே.வி.சுப்பிரமணியன் பதவி விலகிய போது பிரதமர் மோடி, கே.வி.சுப்பிரமணியனுடனான பணிக்காலம் இனிமையானது. அவரது அறிவும், திறமையும், பொருளாதாரப் பிரச்சினைகளில் அவரின் பார்வையும் தனித்துவமானது. கொள்கை முடிவுகளில் சீர்திருத்தவாதி போல் செயல்பட்டார் என பாராட்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் யார் என்ற கேள்வி எழுந்தது. நேஷனல் கவுன்சில் ஆப் அப்ளைடு எகனாமிக் நிறுவன இயக்குனர் பூனம் குப்தா, நிதியமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சன்யால், டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸின் பொருளாதார தலைவர் பாமி துவா ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவின் க்ரியா பல்கலைக் கழக பேராசிரியரான வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன், அகமதாபாத் ஐ.ஐ.எம்-ல் முதுகலை டிப்ளமோ முடித்தார். மாசசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஏற்கனவே பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதிநேரமாக பணியாற்றியவர். சிங்கப்பூரை சேர்ந்த ஜூலியஸ் பேர் & கோ வங்கியின் சர்வதேச தலைமை முதலீட்டு அதிகாரியாகவும் பணியாற்றியவர். பொருளாதாரம் சார்ந்த ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார் வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன்.