மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு
டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.
மாநிலங்களவையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
இதற்கிடையே, மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் பதவியேற்றனர்.
அதிமுக சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்று கொண்டனர். தமிழக எம்.பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வெங்கைய்யா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகவும், 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக இருந்தபோது 108 அவசர மருத்துவ ஊர்தி, புகையிலை ஒழிப்பு நடவடிக்கை, சினிமாக்களில் மது, புகையிலை போன்றவற்றை தணிக்கை நெறிகளை கொண்டு வந்தார் என்பதும் நினைவிற்குரியது.