நாடாளுன்றத்தில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய ஆ.ராசா
டெல்லி: நாடாளுமன்றத்தில் லோக்சாபா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து திமுக எம்பி ஆ.ராசா சிறிது நேரம் அவையை வழிநடத்தினார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் 17வது லோக்சபா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூடியது.
இதில் ஆளும் பாஜக கூட்டணி எம்பிக்கள், காங்கிரஸ் திமுக உள்ளிட்ட பல்வேறு திர்க்கட்சி எம்பிக்கள் தினமும் தங்கள் தொகுதி பிரச்னைகளை பேசி வருகிறார்கள். அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகிறார்கள்.
சபாநாயகர் ஓம் பிர்லா இவர்களுக்கு நேரம் ஒதுக்கும் பணியை சிறப்பாக செய்துவருவதால் அவையில் இதுவரை எந்த பிரச்னையும் எழவில்லை.அனல் பறக்கும் விவாதங்கள், சூடான கேள்விகள், என லோக்சபா நாள்தோறும் விறுவிறுப்பாக செல்கிறது.
இந்நிலையில் அவையில் சபாநாயகர் இல்லாத சில நேரங்களில் உறுப்பினர்களில் ஒருவரே அவையை நடத்துவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் நீலகிரி தொகுதி எம்பியும், திமுகவைச் சேர்ந்தவருமான ஆ ராசா இன்று சில நிமிடம் அவையை நடத்தினார்.
அப்போது கேரளாவின் மாவேலிக்கரை எம்பி சுரேஷ் கொடிகுனில் (காங்கிரஸ் கட்சி எம்பி) தங்கள் ஊர் பிரச்னை தொடர்பாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராசா நேரம் முடிந்துவிட்டதாகவும் அமைச்சர் பதில் அளிக்க வேண்டி உள்ளதாகவும் கூறினார். அதற்கு சுரேஷ் கொடிகுனில் மிக முக்கிய பிரச்னை, அமைச்சர் அப்புறம் பதில் அளிக்கட்டும் என்று ராசாவுக்கு பதில் சொல்லிவிட்டு பேசிக்கொண்டே இருந்தார்.