சொன்ன சொல்லை மீறிய அன்னா.. அடிச்ச பல்டியால் விவசாயிகள் அதிர்ச்சி!
டெல்லி : விவசாயிகள் போராட்டம் தொடர்பான தான் சொன்னதை நிறைவேற்றாமல் பல்டி அடித்து விட்டார் அன்னா ஹஸாரே.. இதனால் விவசாயிகள் கடும் எரிச்சலடைந்துள்ளனர்.
2 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அரசியல் தலைவர்களைப் போலவே சமூக ஆர்வலரான அன்னா ஹசாரேவும் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. சத்தம் போடாமல் கமுக்கமாக இருந்து வந்தார்.
இவர் மீது ஒரு அதிருப்தி வலுவாக நிலவுகிறது. மக்கள் போராட்டங்களின்போதெல்லாம் இவர் மக்களுக்கு ஆதரவாக வருவதில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டு.
பல்டி அடித்தார்:
டெல்லி மோதலுக்குப் பிறகு விவசாயிகளுக்காக அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பதை போன்று, விவசாயிகளுக்காக உண்ணாவிதர போராட்டம் அறிவித்தார். சரி இப்போதாவது வந்தாரே என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் வழக்கம் போல பல்டி அடித்து விட்டார் அன்னா ஹஸாரே. அதாவது மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக கூறி போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டார்.
யார் இந்த அன்னா ஹசாரே :
கிஷன் பாபுராவ் ஹசாரே என்பது தான் இவரது இயற் பெயர். ஆனால் அன்னா ஹசாரே என்று சொன்னால் தான் இவர் பற்றி அனைவருக்கும் தெரியும். மகாத்மா காந்தியின் போராட்டங்கள் பலவற்றில் பங்கெடுத்த ஹசாரே, பிறகு ராணுவத்தில் டிரக் டிரைவராக பற்றி ஆற்றினார். பிறகு ராணுவ சிப்பாயாக சில காலம் பயிற்சி எடுத்து, பணியாற்றியவர். மகாராஷ்டிராவில் உள்ளூர் பிரச்னைகளுக்காக அடிக்கடி போராட்டம் நடத்தி வந்தார்.
பிரபலமானது எப்படி :
2011 ம் ஆண்டு, ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரில், அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் நடைபெற்ற நிலக்கரி ஊழல், காமல்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் போன்றவற்றை தெிர்த்து டெல்லி ஜந்தர்மந்திரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் இப்போது புதுச்சேரி கவர்னராக இருக்கும் கிரண்பேடி, டில்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், பாபா ராம்தேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஹசாரேவை நாடு முழுவதும் பிரபலபடுத்தியது. இந்த போராட்டத்திற்கு பிறகு தான் டெல்லி ஜந்தர்மந்திரும் போராட்டத்திற்கு பெயர் பெற்ற இடமாக மாறி விட்டது.
போராட்டம்னா உண்ணாவிரதம் :
2011 ல் ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா கொண்டு வர உண்ணாவிரதம் இருந்தார். அதன் பிறகு அதனை வலுப்படுத்த வேண்டும், அந்த சட்டத்திற்குள் பிரதமர் முதல் அனைவரையும் கொண்டு வர வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அன்னா ஹசாரே என்றாலே உண்ணாவிரதம் தான் என்று சொல்லும் அளவிற்கு டிரேட் மார்க் உருவானது.
எதற்காவது பலன் கிடைத்ததா :
மக்களை நேரடியாக பாதித்த எந்த ஒரு பிரச்னைக்காகவும் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியது இல்லை என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை. ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்காக அவ்வப்போது இவர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பார். பிறகு ஏதாவது ஒரு காரணத்திற்காக வாபஸ் பெறுவதாக அறிவிப்பார். ஆனால் அவர் போராடிய பிரச்னை தீர்ந்ததா, என்ன பலன் கிடைத்தது என்பது பற்றி இதுவரை அவரோ, மற்றவர்களோ வாய்திறந்ததில்லை.
பாஜக.,வை எதிர்க்காதது ஏன் :
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அடிக்கடி உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய ஹசாரே, பாஜக பதவியேற்ற பிறகு இந்த 6 ஆண்டுகளில் பெரிய அளவில் போராட்டம் நடத்தியதாக தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஹசாரே போராட்டம் நடத்தியதற்கு பின்னால் இருந்து இயக்கியதே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் என சமீபத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறினார். அது சர்ச்சையாக்கப்பட்ட போதும் ஹசாரே தரப்பில் எந்த மறுப்பும், விளக்கமும் அளிக்கவில்லை.
என்ன காரணம் :
வழக்கம் போல் விவசாயிகளுக்கு பிரச்னைக்காகவும் உண்ணாவிரதம், அதுவும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக ஹசாரே அறிவித்தார். அவர் அறிவித்த சிறிது நேரத்திலேயே மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, பா.ஜ., முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஹசாரேவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஹசாரே முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக ஹசாரே அறிவித்தார்.
இதுக்கு பேர் தான் பல்டியா :
2 மாதமாக போராட்டம் நடத்தி, குடியரசு தினத்தன்று விவசாயிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதுவரை இந்த கலவரம் ஓய்ந்தபாடில்லை. விவசாயிகளுடன் மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. ஆனால் ஹசாரே போராட்டம் அறிவித்ததும், அவருடன் மத்திய அரசு எப்படி பேச வந்தது, உடனே மத்திய அரசு ஒப்புக் கொள்ளும் அளவிற்கு அப்படி ஹசாரே என்ன கோரிக்கை வைத்தார் என எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் போராட்டத்தை மட்டும் ஹசாரே வாபஸ் பெற்றுள்ளார். அதாவது வழக்கம் போல அன்னா பல்டி அடித்து விட்டார்!
திசை திருப்பல்:
என்ன விசேஷம் என்றால், அன்னா அறிவித்த போராட்டத்தை விவசாயிகள் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொள்ளவில்லை. அது திசை திருப்பும் வேலை என்றுதான் பலரும் விமர்சித்தனர் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது விவசாயிகள் போராட்டத்தை வேறு சிலர் திசை திருப்பி வலுவிழக்கச் செய்து விட்டதால் அன்னா தனது போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டாரோ என்று சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.