டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 மத்தியஸ்தர்கள் வருகை தந்துள்ளனர்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் தொடருகிறது. அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தல்களில் ஷாகீன் பாக் போராட்டம் முக்கிய இடம் பிடித்தது.
இந்நிலையில் ஷாகீன் பாக் போராட்டத்துக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஷாகீன் பாக் போராட்டத்துக்கு தடை விதிக்கவில்லை.
அத்துடன் இப்போராட்டத்தை வேறு ஒரு இடத்தில் நடத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இதற்காக சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை மத்தியஸ்தர்களாகவும் உச்சநீதிமன்றம் நியமித்தது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு மத்தியஸ்தர்களும் சற்று முன்னர் ஷாகீன் பாக் போராட்ட களத்துக்கு வருகை தந்தனர். போராட்டக் குழுவினருடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.