சிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்து கொலை செய்வர் என்று மேற்கு டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் களைகட்டியுள்ளது. இத் தேர்தலில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள் விவாதப் பொருளாகி உள்ளது.
இப்போராட்டங்களை சுட்டிக்காட்டிப் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் துரோகிகளை சுட்டுத் தள்ள வேண்டும் என்றார்.. இதையே பிரசாரத்தின் போது முழக்கமாக எழுப்புமாறு பொதுமக்களையும் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டது சர்ச்சையானது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மேற்கு டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக பர்வேஷ் வர்மா கூறியுள்ளதாவது:
டெல்லி தேர்தல் என்பது மிகச் சிறிய தேர்தல் அல்ல. இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டையும் நிலைத்தன்மையையும் வெளிப்படுத்துகிற தேர்தல். டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஒரு மணிநேரத்தில் ஷாகீன் பாக் பகுதியில் போராடுகிறவர்கள் ஒருவர் கூட அங்கே இருக்கமாட்டார்கள்.
பாகிஸ்தானில் இன்னொரு ஷாக்... 24 வயது இந்து பெண்ணை கடத்தி.. இஸ்லாமுக்கு மாற்றி.. கட்டாய திருமணம்!
டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் பிப்ரவரி 11-க்குப் பின்னர் ஒரே ஒரு மாதம் மட்டும் அவகாசம் கொடுங்கள்... என்னுடைய மேற்கு டெல்லி தொகுதியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட அனைத்து மசூதிகளையும் அகற்றுவேன். டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
டெல்லி மக்கள் இப்போது ஒரு முடிவு எடுக்க வேண்டிய தருணம். சி.ஏ.ஏ. போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்துவிடுவார்கள்.. உங்கள் சகோதரிகளை, குழந்தைகளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவார்கள். இன்றே முடிவெடுங்கள்.. நாளை உங்களை காப்பாற்ற மோடியும் அமித்ஷாவும் வரமாட்டார்கள். இவ்வாறு பர்வேஷ் வர்மா பேசியுள்ளார்.