குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு- வடகிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டம்- பந்த்
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. திரிபுராவில் தேசிய நெடுஞ்சாலை எண் 8-ல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார். கடந்த முறை இம்மசோதாவை ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றவிடவில்லை.
இதனால் இம்முறை எப்படியும் ராஜ்யசபாவில் நிறைவேற்றும் முடிவில் மத்திய அரசு இருக்கிறது. இந்த மசோதாவால் தங்களது தனித்தன்மை பாதிக்கப்படும் என்பதை முன்வைத்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் முகத்தை மாற்ற போகும் குடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது? என்ன பிரச்சனை?
அஸ்ஸாம் போராட்டம்
வடகிழக்கு மாநிலங்களுடன் மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு எதிரானது எனக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அஸ்ஸாமில் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்து முடக்கப்பட்டது.
அஸ்ஸாமில் முழு அடைப்பு
மேலும் அஸ்ஸாமின் பல்வேறு மாணவர் அமைப்புகள் இன்று அங்கு முழு அடைப்புக்கு அழைத்து விடுத்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏ.கே.ஆர்.எஸ்.யூ அமைப்பின் பொதுச்செயலாலர் கோகுல் பர்மன், குடியுரிமை சட்ட திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அத்துடன் அஸ்ஸாமின் 6 ஓபிசி ஜாதிகளை பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவும் இப்போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
மாணவர் அமைப்புகள் பந்த்
இதனிடையே 30க்கும் மேற்பட்ட அனைத்து வடகிழக்கு மாணவர் இயக்கங்களை உள்ளடக்கிய வடகிழக்கு மாணவர்கள் கூட்டமைப்பான நெசோ, நாளை 11 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திரிபுராவில் உச்சகட்ட போராட்டம்
இதேபோல் திரிபுராவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண8- வழிமறித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திரிபுராவில் இன்று 12 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
போர்க்களமான வடகிழக்கு மாநிலங்கள்
திரிபுராவில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டிதான் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மணிப்பூரிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்கள், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ளது.