பாபர் மசூதியை இடிக்க முற்பட்டது சமூக விரோதிகள்.. தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி
டெல்லி: பாபர் மசூதியை இடிக்க முற்பட்டது சமூகவிரோதிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கரசேவகர்களை பயன்படுத்தி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அசோக் சிங்கால் போன்ற வலதுசாரி அமைப்பின் தலைவர்களும் பாபர் மசூதி இடிப்பதற்கு சதி செய்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு அந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி கிடையாது என்றும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தன்று, சமூக விரோத சக்திகள் பாபர் மசூதியை இடிக்க முற்பட்டதாகவும், ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த தலைவர்கள் அதை தடுக்க முயன்று உள்ளது ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. வீடியோ கான்பரன்சில் ஆஜரான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி
பாபர் மசூதியை இடிப்பதற்கு தூண்டிவிடுவது போல, குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோ பதிவு தெளிவாக இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதியை இடிக்க முற்பட்டது, சமூக விரோத சக்திகள் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர குறிப்பிட்ட அந்த அமைப்பின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.