சாரி மிஸ்டர் சிபல்.. எதுவும் செய்ய முடியாது! ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மறுப்பு
Recommended Video
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு குறைபாடுகள் உடையதாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட் பதிவாளர் கூறிய நிலையில், இந்த மனு இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் பட்டியலிடப்படாததை நீதிபதி ரமணா சுட்டிக் காட்டி, இப்போது எதையும் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டார்.
2007ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றன.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரவேண்டும் என்று அந்த இரு அமைப்புகளும் வலியுறுத்தி இருந்தன. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே முன்ஜாமீன் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வர இருந்தது. சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர் குழு வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில், இதுவரை இந்த வழக்கு விசாரணையின்போது சிதம்பரம் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளதை உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டு அவருக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று கூற உள்ளோம் என்று தெரிவித்தனர்.
அதேநேரம் அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவிக்கையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு வலியுறுத்த உள்ளது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு, இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் என ரமணா தெரிவித்து வழக்கை தலைமை நீதிபதிக்கு மாற்றினார்.
ஆனால், அயோத்தி விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு காலை முதல் விசாரணை நடத்தி வருகிறது. எனவே, மதிய உணவு இடைவேளைக்கு பிறகுதான், தலைமை நீதிபதி இந்த விஷயத்தில் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சிதம்பரம் தாக்கல் செய்துள்ள, முன் ஜாமீன் மனுவை பரிசீலித்த, சுப்ரீம் கோர்ட் பதிவாளர், அது குறைபாடு உள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.இந்த பரபரப்புகளுக்கு நடுவே, நீதிபதி ரமணா முன்னிலையில் சிதம்பரம் வக்கீல் கபில் சிபல் ஆஜரானார். இன்னும் தலைமை நீதிபதி அமர்வு இந்த மனுவை விசாரிக்கவில்லை எனவும், எனவே ப.சிதம்பரத்திற்கு இடைக்கால சட்ட பாதுகாப்பு வழங்க தாங்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், சாரி மிஸ்டர் சிபல். இப்போது எதுவும் செய்ய முடியாது. தலைமை நீதிபதிதான், இந்த வழக்கு எப்போது பட்டியலிடப்படும் என்று தெரிவிப்பார் என்று தெரிவித்துவிட்டார். எனவே, இன்று வழக்கு விசாரணைக்கு வராது என்றே தெரிகிறது.