தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ்.. கட்டுமான பணிகளை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி
டெல்லி:சென்னை தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு உச்சநீதி மன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னை தியாகராயர் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸின் ஜவுளி நிறுவனத்தின் 9 மாடிக் கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதே தமிழகம் முழுவதும்... குறிப்பாக சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. பல்வேறு வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த சூழ்நிலையில், தீ விபத்துக்குள்ளான கட்டிடம் பின்னர் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது.
அதன் பின்னர் அந்தக் கட்டிடத்தை மீண்டும் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.கட்டிட அனுமதி கடந்த ஜூன் 21-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து கட்டிடம் வேகமாகக் கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிஎம்டிஏ விதிகளுக்கு எதிராக அதே இடத்தில் புதிய கட்டிடத்தைக் கட்டும் பணியை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தொடங்கியுள்ளதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கானது, இருதரப்பின் வாத, பிரதிவாதங்களுக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரரான கண்ணன் பாலக்கிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்படுவதாக வாதிடப்பட்டது.
சென்னை சில்க்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். உரிய அனுமதி பெற்றுத்தான் கட்டிடம் கட்டப்படுவதாக அவர் கூறினார். இதையடுத்து, கண்ணன் பாலகிருஷ்ணன் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, கட்டிடத்தை கட்டுவதற்கும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.