தடை எல்லாம் விதிக்க முடியாது… பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி
டெல்லி:முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி 1998-ம் ஆண்டு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பாஜகவில் நிர்வாகியாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி மீது அரசு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக அவர் உள்ளிட்ட 108 பேர் மீது போலீசார் 1998-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து விளையாட்டுத் துறை அமைச்சரானார். அவர் மீதான இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், பால கிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜனவரி 7 அன்று தீர்ப்பளித்து.
அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கீழமை நீதிமன்றம் தண்டனையை வரும் பிப்ரவரி 7-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
தீர்ப்பின் காரணமாக பாலகிருஷ்ண ரெட்டி தமது அமைச்சர் பதவியை இழக்க... தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய இடைக்கால மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதோடு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் என்றும் வழக்கு தொடர்பாக, 4 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.