ஜெயலலிதா மரணத்தில் அப்போலா எதையோ மறைக்க முயற்சி.. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் பதில்
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ எதையோ மறைமுக்க முயற்சிப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போதைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பு மற்றும் ஜெயலலிதா வீட்டில் பணியாற்றிவர்கள், பாதுகாவல்கள் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டது. இதேபோல் ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்களிடம் விசாணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர் குழு அமைக்காமல் ஜெயலலிதாவுக்கு அளித்த மருத்துவ சிகிக்சை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அப்போலா மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை மறைக்க அப்போலோ மருத்துவமனை முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவும், விசாரணை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது