காவிரி ஆணையத்திற்கு முழு நேர தலைவர் தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு
டெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவர் மசூத் உசேனை நீக்கி விட்டு, முழு நேர தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தையும் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.
அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் இடைக்கால தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தற்காலிக தலைவரான மசூத் உசேனை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. மசூத் உசேன் தற்போது மத்திய நீர் ஆணையத்தின் தலைவராகவும் இருக்கிறார். இதனால்தான் புதிய தலைவரை நியமிக்க தமிழக அரசு கோரியுள்ளது.
தமிழக அரசின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.