எனக்கு அதிமுகவில் இருக்க பிடிக்கவில்லை.. அதான் ஒதுங்கி இருந்தேன்: அப்சரா ரெட்டி
ராகுல்காந்தி ஒரு மனிதராக மதித்து பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக அப்சரா கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை.. அதனால்தான் ஒதுங்கி இருந்தேன் என்றும், சுற்றுப்பயணம் செய்து தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பேன் என்றும் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
மகிளா காங்கிரஸ் பொது செயலாளராக ராகுல் காந்தி அப்சரா ரெட்டியை நியமித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அப்சரா ரெட்டி சொன்னதாவது:
"பாஜகவில் தனிப்பட்ட முறையில் சுயமாக சிந்திப்பவர்களுக்கு இடம் இல்லை. அப்படியே சிந்தித்தாலும் அவர்களை ஒதுக்கி புறக்கணித்து விடுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை திருநங்கையாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல் ஒரு மனிதராக பார்த்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.
திறமைக்கு ஆண்-பெண் பாகுபாடில்லை. எல்லோரும் ஒன்றுதான். திறமைசாலிகளுக்கு காங்கிரசில் இடம் உண்டு. 'மக்கள் பணியாற்ற உங்களை போன்றவர்கள் காங்கிரசில் இருக்க வேண்டும்' என்று கூறியது எனக்கு புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் மறைந்த ஜெயலலிதா என்னை செய்தி தொடர்பாளராக நியமித்தார். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அக்கட்சியில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை. அதனால்தான் இவ்வளவு நாள் ஒதுங்கி இருந்தேன். திருநங்கையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நான் நிரூபித்து காட்டுவேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் உழைப்பேன்" என்றார்.