விஜயகாந்த் ஸ்டைல் ரேஷன் திட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி தேர்தல் அறிக்கை
டெல்லி: வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்ற திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்.
டெல்லியில் சட்டசபை தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது என ஆளும் ஆம் ஆத்மி போராடி வருகிறது.
ஆனால் பாஜக, காங்கிரஸோ எப்படியாவது தலைநகர் டெல்லியை பிடிக்க வேண்டும் என தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் பணியின் போது மரணமடையும் துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டு வந்து தரப்படும்.
ஜன்லோக்பால் அமைக்கப்படும்.
மூத்த குடிமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
பெண்கள் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும்.
டெல்லியில் கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வகை செய்யப்படும் என்பன உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டன.
வீடு தேடி ரேஷன் திட்டத்தை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.