முப்படைகளின் முதலாவது தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்!
டெல்லி: இந்திய ராணுவத்தின் முப்படைகளின் முதலாவது தலைமை தளபதியாக ராணுவ ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர்.
இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. அண்மையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முப்படைகளுக்குமான தலைமை தளபதியை நியமிக்க ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து இம்மாதத்துடன் ஓய்வு பெறும் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தை முப்படைகளின் தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. அவரது இப்பதவிக் காலம் 2 ஆண்டுகளாகும்.
முப்படைகளுக்கான தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத், ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க இயலாது; ஆனால் முப்படை தளபதிகளிடம் அரசின் முடிவுகளை தெரிவித்து அவற்றை செயல்படுத்துகிற ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற முடியும்.
அதேபோல் ஆயுத கொள்முதல், முப்படைகளின் கூட்டு நடவடிக்கை உள்ளிட்டவைகளையும் ஒருங்கிணைக்கும் பணியை முப்படைகளுக்குமான தலைமை தளபதி மேற்கொள்வார். நமது ராணுவத்தில் முதல் முறையாக இப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது.