சீண்டும் சீனா.. எல்லையில் அதிகரிக்கும் டென்ஷன்.. லடாக் விரைந்த ராணுவ தளபதி நரவனே
டெல்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலைமையைப் பற்றி அறிந்து கொள்ள லடாக்கில் உள்ள 14 Corps தலைமையகமான லேவுக்கு ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே இன்று வருகை தந்தார்.
ராணுவத் தலைவரின் வருகைகள் பொதுவாக ராணுவத்தால் நன்கு செய்தியாக வெளிப்படுத்தப்படும். ஆனால் இன்று, ராணுவத்தால், எந்த விவரங்களும் புகைப்படங்களும் பகிரப்படவில்லை.
ஜெனரல் நரவனே சீன எல்லை பகுதிகளுக்கும் செல்லவில்லை, ஆனால் 14 கார்ப்ஸ் தலைமையகத்தில் ராணுவ தளபதிகளுடன் சுமார் அரை நாள் ஆலோசனை நடத்தினார். அவருடன் வடக்கு மண்டலத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியும் இருந்தார்.
அதிர வைக்கும் ஆபாச வீடியோக்கள்.. சரமாரி பெண் தொடர்பு.. சிபிசிஐடி வசம் நாகர்கோவில் காசி வழக்கு!
சீனா தொல்லை
லடாக்கில் குறைந்தபட்சம் 4 பகுதிகளிலாவது இரு நாடுகளின் துருப்புக்களும் மோதிக் கொண்ட நிலையில் ராணுவத் தலைவரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் சாதாரண ரோந்துக்கு கூட சீனா தடையாக இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியிருந்தது.
ராணுவ குவிப்பு
இந்தியாவும் சீனாவும் கூடுதல் ராணுவ வீரர்களை எல்லையில் குவித்தபடி உள்ளன. கிழக்கு லடாக்கின் மூன்று பகுதிகளில் எல்லையோரத்தில் கூடாரங்களை அமைத்துள்ளன. அவற்றில் வடக்குக் கரையான பாங்கோங் த்சோ, டெம்சோக் மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதிகளும் அடங்கும்.
5 கட்ட பேச்சுவார்த்தை
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் சமீபகாலமாக கைகலப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து, இந்தியா மற்றும் சீன ராணுவத்தினிடையே குறைந்தது ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், லடாக்கில் பதட்டங்களை அவை குறைக்கவில்லை.
வியூகம்
பதற்றத்தைத் தணிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான், அடுத்தகட்ட வியூகங்களை மேற்கொள்ள ராணுவ தலைமை தளபதி, எல்லைப்பகுதிக்குச் சென்றிருக்க கூடும் என தெரிகிறது.