ரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை
டெல்லி: அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வு நாளில், ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.10 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வாங்குவதாக, கூறி, அரசாங்க நிதியை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றம், லெப்டினன்ட் ஜெனரல் ஒருவருக்கு, கடந்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாளில்,தண்டனை வழங்கி உள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தனிப்பட்ட முறையில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான உபகரணங்கள் வாங்குவதற்காக அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்கள் வந்ததையடுத்து, அந்த அதிகாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மூத்த லெப்டினன்ட் ஜெனரலின் கீழ் ராணுவத் தலைமையகம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ராணுவத் தலைமை ஜெனரல் பிபின் ராவத்தின் முதன்மை பணியாளர் அதிகாரி தலைமையில் உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டது. ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தளபதியாக பொறுப்பேற்றதுமே, பிபின் ராவத் கறாராக தெரிவித்திருந்தார். ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், பல அதிகாரிகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டு ஓய்வூதியம் இல்லாமல் ஓய்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், விமானப்படைக்கு 75 பயிற்சி விமானங்களை ரூ.2,895 கோடிக்கு வாங்க 2012ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதில், ஊழல் நடந்தது கண்டறிப்பட்டதால், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் மீது 3 ஆண்டு விசாரணைக்குப் பிறகு சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. விமானப்படையின் பயன்பாட்டுக்கு 75 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்குவதற்காக, கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியின் போது டெண்டர் விடப்பட்டது.