விடுதலையாகிறார் அர்னாப் கோஸ்வாமி.. இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட மஹாராஷ்ட்ராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அன்வே நாயக்கை தற்கொலை செய்ய தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இவருக்கும் ஜாமீன் அளிக்க மும்பை ஹைகோர்ட்டு மறுத்த நிலையில்.. அர்னாப் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார்.
அவரின் சேனலை நானே பார்க்க மாட்டேன்... ஆனால்.. அர்னாப் கோஸ்வாமி வழக்கில் விளாசிய நீதிபதி சந்திரசூட்!
எப்போது
நாயக் வழக்கில் 2019ல் முடித்து வைக்கப்பட்ட போலீஸ் விசாரணை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மும்பை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக அர்னாப் கோஸ்வாமி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது. நீதிபதி சந்திரசூட், இந்திரா பானர்ஜி அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது.
விடுதலை
இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால ஜாமீனில் விடுவிக்க குற்றவாளிகளை ரூ.50000 பிணை தொகை கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
என்ன சொன்னது
அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன் வழங்காததை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்து இருக்கிறது. இந்த வழக்கில் முழுமையாக எப்ஐஆர் பதியப்படவில்லை. தற்கொலை குறித்த முழுமையான விவரம் இல்லை. நாயக்கை அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதற்கான நோக்கம் முறையாக எப்ஐஆரில் கூறப்படவில்லை.
நியாயம் இல்லை
இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் மறுப்பது நீதிக்கு எதிரானது. நீதியை நிலைநாட்ட வேண்டிய அவசியம் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது. தனிப்பட்ட காழ்ப்புணர்விற்கு இடம் கொடுக்க கூடாது. அதனால் இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கும் அவருடன் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.