ரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்
டெல்லி: ரிபப்ளிக் ஆங்கில டிவி சேனலின் 82% பங்குகள் மூத்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்குரியதுதான்; இதன் முழு உரிமையாளரும் அர்னாப் கோஸ்வாமிதான் என அந்த டிவி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த அர்னாப் கோஸ்வாமி 2016-ல் ரிபப்ளிக் டிவியில் இணைந்திருப்பதாக அறிவித்தார். 2017-ல் ரிபப்ளிக் டிவி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏஆர்ஜி அவுட்லைர் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம் உள்ளன. அர்னாப் கோஸ்வாமியின் நிறுவனம் ரிபப்ளிக் டிவியின் நெட்வொர்க் சொத்துகளில் 99% பங்குகளையும் தம் வசம் வைத்திருக்கிறது.
ரிபப்ளிக் டிவியின் பங்குதாரர்கள் குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன; ரிபப்ளிக் டிவியின் உண்மையான உரிமையாளர் குறித்தும் தவறான பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அர்னாப் கோஸ்வாமியும் அவரது குடும்பத்தினரும் 2017-ல் ரிபப்ளிக் டிவி தொடங்கப்பட்ட போது 84% பங்குகளை வைத்திருந்தனர்.
இதன் பின்னர் கூடுதல் முதலீட்டுக்காக சிறிய அளவில் பங்குகள் வெளியிடப்பட்டன. 2019-ம் ஆண்டுக்குப் பின்னர் அர்னாப் கோஸ்வாமியின் ஏஆர்ஜி அவுட்லைர் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மட்டும் 82 % பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கிறது.
ரிபப்ளிக் டிவியின் முழு உரிமையாளரும் அர்னாப் கோஸ்வாமிதான். www.republicworld.com -ன் கீழான டிஜிட்டல் சொத்துகளில் 99% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அர்னாப் கோஸ்வாமியின் 3 சட்டப்பூர்வமான நிறுவனங்களுமே இந்தியாவில் பதிவு செய்யப்பட்டவைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.