டிடி ப்ரீடிஷ் பயனாளர்களை சட்டவிரோதமாக 2 ஆண்டுகளாக பயன்படுத்திய அர்னாப் கோஸ்வாமி- அதிர்ச்சி தகவல்
டெல்லி: மத்திய அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனின் ப்ரீடிஷ், டிடிஹெச் சேவை ஆகியவற்றை எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் 2 ஆண்டுகளாக ரிபப்ளிக் டிவி-க்காக அர்னாப் கோஸ்வாமி பயன்படுத்தியதாக அதிரவைக்கும் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி, முன்னணி டிவி சேனலாக, அதிக பார்வையாளர்களைக் கொண்டதாக வெளிப்படுத்துவதற்காக சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டது வெட்டவெளிச்சமானது. இந்த டிஆர்பி ரேட்டிங் மோசடி வழக்கில் பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ்குபா, ரிபப்ளிக் டிவி சிஇஓ விகாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பார்த்தோ தாஸ்குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் மூலம் சாட் செய்த விவரங்களையும் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளனர். நாட்டின் ராணுவ ரகசியங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அர்னாப் கோஸ்வாமி அவற்றை பார்த்தோ தாஸ்குப்தாவுடன் சர்வ சாதாரணமாக உரையாடியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அர்னாப் கோஸ்வாமிக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்டது யார்? என்கிற சர்ச்சையும் வெடித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் கீழான தூர்தர்ஷனின் ப்ரீ டிஷ், டிடிஹெச் சேவை ஆகியவற்றின் பயனாளர்களை கொண்டு ரிபப்ளிக் டிவி ஆதாயம் அடைந்திருக்கிறது; இதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் எதனையும் அர்னாப் கோஸ்வாமி கட்டவும் இல்லை; சட்டவிரோதமாக 2 ஆண்டுகாலம் இத்தகைய மோசடியில் அர்னாப் ஈடுபட்டிருந்தார் என்கிற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தூர்தர்ஷனின் ப்ரீ டிஷ், டிடிஹெச் சேவை பயனாளர்களை பயன்படுத்துவதற்காக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ12 கோடி வரை அரசுக்கு கட்டணமாக செலுத்தி இருக்க வேண்டும் அர்னாப். ஆனால் மத்திய அரசில் தமக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடா அரசு நிறுவனங்களை சொந்த ஆதாயத்துக்கு அர்னாப் கோஸ்வாமி பயன்படுத்தி இருக்கிறார். 2019-ல் இந்த விவகாரத்தை பிரசார் பாரதி கையில் எடுத்த போதுதான் இந்த மோசடியை அர்னாப் கோஸ்வாமி நிறுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் மும்பை போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
தேச விரோத செயலில் மட்டுமல்லாமல் சட்ட விரோதமாகவும் பல காரியங்களை அர்னாப் செய்திருப்பது அதிர்ச்சியை அதிகரிக்க வைக்கிறது.