தூக்கு தண்டனை...... வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் அற்புதம்மாளும் ஆஷாதேவியும்
டெல்லி: இந்திய நீதித்துறை மற்றும் அரசியல் வரலாற்றில் தூக்கு தண்டனை குறித்த அத்தியாயத்தில் தெற்கே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் வடக்கே நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியும் நிச்சயம் இடம்பெறுவர்.. ஆனால் ஒருவர் மாண்டொழிக மரண தண்டனை என முழங்கியவர்.. மற்றொருவர் எப்போது தூக்கிலிடுவீர்கள்? என ஆவேசப்பட்டவர் என்பதுதான் விசித்திரம்.
Recommended Video
இந்தியாவில் 2015-ம் ஆண்டு தீவிரவாதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.. அதற்குப் பின்னர் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார படுகொலை வழக்கில் குற்றவாளிகள் இன்று அதிகாலை 5,30 மணிக்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கில் போடப்பட்டுள்ளனர்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்தான் அதிகபட்சமாக 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. அது பின்னாளில் 7 பேருக்கானது... ஒருகட்டத்தில் 7 பேரின் தூக்குமே ஆயுள் தண்டனையாக்கப்பட்டு அவர்கள் விடுதலையின் வாசலில் நிற்கின்றனர்.
7 வருட சட்ட போராட்டம்.. துளியும் கலங்கவில்லை.. விடாமல் போராடிய ஆஷா தேவி.. நிர்பயா தாய் வென்ற கதை!
பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் மரண தண்டனையே இருக்கக் கூடாது என்ற முழக்கத்துடன் வீதி வீதியாக பிரசாரம் செய்தவர் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அற்புதம்மாளின் பயணமும் ஓட்டமும் இன்னமும் நின்றபாடில்லை. இப்போதும் பேரறிவாளன் எனும் மகனுக்கான இந்த தாய் ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்.
பட்டி தொட்டி எங்கும் பிரசாரம்
முதுமை காலத்தில் கால் நூற்றாண்டு காலம் மகனுக்காக மட்டுமல்ல.. தூக்கு தண்டனையே கூடாது.. என்னைப் போல ஒரு தாய் கதறக் கூடாது என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார்.. நீதிமன்ற விசாரணை நாட்களில் ரயிலடியிலும் பேருந்து நிறுத்தங்களிலும் படுத்துறங்கி விழித்தெழுந்து மனித உரிமைப் போராளியாக திகழ்ந்தவர் அற்புதம் அம்மாள்.. அவரது உழைப்புக்கும் ஓட்டத்துக்கும் தலைவணங்காத நெஞ்சங்களே இல்லை என்பதாலே என்னவோ அவரது மகன் தூக்கு மேடையில் இருந்து தப்பினார். அவரது மகனுடன் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட அனைவரும் விடுதலைக்கான நாளுக்காக காத்திருக்கிறார்கள்.
நிர்பயாவின் தாய் ஆஷாதேவி
டெல்லியில்.. மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த தேசமே உறைந்தது.. அப்போதே டெல்லியை உலுக்கிய பிரமாண்ட தன்னெழுச்சி பேரணியை பொதுமக்கள் தொடங்கினர்.. அன்று தொடங்கியது நிர்பயா எனும் அபலையின் தாயார் ஆஷாதேவியின் பயணம்.. தெற்கே அற்புதம்மாள் மரணதண்டனையே கூடாது என்று முழங்கினார். ஆனால் ஆஷாதேவியோ, பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே தீர்வு.. எப்போதுதான் தூக்கிலிடுவீர்கள் குற்றவாளிகளை? என கண்ணீரும் கம்பலையுமாக கதறினார்.
விடிய விடிய கடைசிநிமிடம் வரை...
நிர்பயா பலாத்கார வழக்கில் ஏற்கனவே 3 முறை குற்றவாளிகளைத் தூக்கிலிட தேதி குறிப்பிடப்பட்டது. ஆனால் எத்தனை எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனையையும் நிர்பயாவின் குற்றவாளிகள் பயன்படுத்தினர்.. அப்போதெல்லாம் மனச்சோர்வையும் குமுறலையும் கொட்டி கொட்டி அழுதவர் ஆஷாதேவி. 4-வது முறையாகவும் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு நாள் வெள்ளிக்கிழமை மார்ச் 20-ந் தேதி அதிகாலை 5.30 மணி என நாள் குறிக்கப்பட்டது. முந்தைய வியாழன் இரவு தொடங்கி அதிகாலை வரை நீதியின் கதவுகளை மீண்டும் நிர்பயா குற்றவாளிகள் தட்ட தொடங்கினர். அந்த நள்ளிரவிலும் நீதிமன்றங்களுக்கு ஓடோடி வந்தார் ஆஷாதேவி. டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்துக்கும் ஓடி ஓடி களைத்தார் ஆஷாதேவி.
அற்புதம் அம்மாளும் ஆஷாதேவியும்
உச்சநீதிமன்றமும் தூக்கு தண்டனை கைதிகளின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஆனந்தத்தை வெளிப்படுத்திய ஆஷாதேவி தம்மை பேட்டி எடுத்த பெண் நிருபரை வாரி அணைத்து முத்தம் கொடுத்து மகிழ்வை வெளிப்படுத்தினார்.. அற்புதம்மாளும் ஆஷாதேவிகளும் ஓடிய ஓட்டங்களுக்குப் பின்னாள் இருக்கும் காரணங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கலாம்.. ஆனால் இந்திய நீதித்துறையின் வரலாற்றில் அவர்கள் ஓடிய கால்தடங்கள் அப்படியே இருக்கும்.