7 தமிழரையும் விடுவியுங்கள்.. அமித்ஷாவிடம் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தல்
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்று மனு அளித்தார்.
ராஜீவ் வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதனடிப்படையில் தமிழக அமைச்சரவை 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
இத்தீர்மானத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழக அரசு 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி., ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் முயற்சியால் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்று அமித்ஷாவை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது 7 தமிழரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி அற்புதம்மாள் மனு ஒன்றை அளித்தார். இம்மனுவை பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதியளித்திருக்கிறார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவாக ஒரு நிகழ்வுகளுமே அமையவில்லை. பாஜக செயல்படுத்தும் அத்தனை திட்டங்களுமே தமிழகத்தை நாசமாக்கக் கூடியவை. அதனால் பாஜக மீது தமிழகமே ஒட்டுமொத்தமாக வெறுப்பாக இருக்கிறது.
இந்நிலையில் 7 தமிழர் விவகாரத்தில் தங்களை சந்திக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்திருப்பதே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளாகத்தில் வைகோவுடன் சந்திப்பு
அமித்ஷாவுடனான சந்திப்புக்குப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் வைகோவை அற்புதம்மாள் சந்தித்தார். அப்போது திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.