தேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு
டெல்லி: தேசத்தின் தேசிய கொடியை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தா தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; அதுவரை இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தப் போவதில்லை; ஜம்மு காஷ்மீருக்கான தனிகொடிதான் கையில் இருக்கும் என பேசியிருந்தார் மெகபூபா முப்தி. அவரது இந்த பிரிவினைவாத பேச்சு கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது.
370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா
நாடாளுமன்ற ஒப்புதல்
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: 370வது பிரிவு என்பது கடந்த ஆண்டுடன் முடிந்து போன அத்தியாயம். அதை மீண்டும் செயல்படுத்துகிற பேச்சுக்கே இடமில்லை. 370-வது பிரிவு நீக்கம் என்பது அரசியல் சாசனப்படி மேற்கொள்ளப்பட்ட ஒருநடவடிக்கை. நாடாளுமன்ற இருசபைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுதான் 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
தேசிய கொடிக்கும் அவமதிப்பு
370வது பிரிவை நீக்குவோம் என இந்த தேசத்தின் மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி கொடுத்தோம். அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறோம். நாட்டு மக்களும் இதனை ஏற்று ஆதரவளித்தனர். பலவகைகளில் நாட்டின் தேசிய கொடிக்கு அவமரியாதை செய்கிறார் மெகபூபா முப்தி. அதை நம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
காஷ்மீரில் மக்கள் மகிழ்ச்சி
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதன் மூலம் அங்கு வளர்ச்சிப் பணிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நாட்டின் இதர பகுதிகளில் உள்ள மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமையை ஜம்மு காஷ்மீர் லடாக் பிரதேச மக்கள் இப்போதுதான் பெற்றிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.
கள்ள மவுனம்- இரட்டை நிலைப்பாடு
ஜம்மு காஷ்மீரில் ஒரு சில குடும்பங்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்கிற நிலைமையை மாற்றி இருக்கிறோம். மெகபூபா முப்தி, தேசியக் கொடியை அவமதிக்கும் விஷயத்தில் பல கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கின்றன. இது அந்த அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டைத்தான் காட்டுகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.