முன்னாள் அமைச்சர் அருண்ஜேட்லி தொடர் சிகிச்சை.. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார் எல் கே அத்வானி!
டெல்லி: முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். மேலும் இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மருத்துவமனைக்கு 10-ஆம் தேதி சென்று பார்வையிட்டு அருண் ஜேட்லியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர்கள், விமானப்படை தளபதிகள், காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இதனால் பாஜகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் அருண்ஜேட்லிக்கு எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு எக்மோ, இன்ட்ரா ஆர்டிக் பலூன் பம்ப் என்ற கருவிகளை பொருத்தியுள்ளோம். அந்த கருவிகளானது இதயம் மற்றும் நுரையீரலை செயல்பட வைப்பதற்கு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவர்களை சந்தித்து ஜேட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.