அவசர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி அட்மிட்.. எய்ம்ஸ் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
டெல்லி: உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அருண் ஜேட்லிக்கு சில மாதங்கள் முன்பாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாக தற்போதைய நரேந்திர மோடி ஆட்சியில் அவர் அமைச்சரவையில் சேர மறுத்து விட்டார். தனது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் இன்று, காலை 10 மணி முதல், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அருண் ஜெட்லிக்கு என்ன பிரச்சனை என்பது உடனடியாக தெரியவில்லை. பலவீனமாக உணர்ந்ததாகவும், மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக அருண் ஜேட்லிக்கு இதய பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இதனிடையே, இரவு 9 மணியளவில், எய்ம்ஸ் மருத்துவமனை, ஒரு ஹெல்த் புல்லட்டின் அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
அருண் ஜெட்லி இன்று காலை எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் பலதரப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவர் இதய நிலை சீராக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.