முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை!
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.
டெல்லி: மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி நேற்று காலமானார். பல்வேறு உடல்நலக்குறைபாடு காரணமாக இவர் கடந்த ஒரு வருடமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜெட்லி அதற்காக தீவிரமான சிகிச்சை பெற்றார். இதனால் அவருக்கு உடலில் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கடந்த வருடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது.
கடந்த மே மாதம் இவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இவரின் உடல் இன்னும் மோசம் அடைந்தது.
அவருக்கு தொடர்ந்து மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட்டு உடல் நலிவடைந்து. இதையடுத்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு, சுவாசம் அளிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டது. அதேபோல் அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.
கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடலுக்கு பாஜக தலைவர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதேபோல் காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இதை அடுத்து இன்று காலை டெல்லி பாஜக தலைமையகத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டது. அவரின் உடலுக்கு இன்று காலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அரசியல் தலைவர்கள் பலர் அவரின் உடலுக்கு பாஜக அலுவலகம் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து டெல்லியில் யமுனை நதிக்கரையில் அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.