அருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை
டெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவருக்கு தற்போது உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். மேலும் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மருத்துவமனைக்கு 10-ஆம் தேதி சென்று பார்வையிட்டு அருண் ஜேட்லியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
நேற்று முன் இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜேட்லியை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு சென்றார். இவர் சென்றதும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு நள்ளிரவில் வருகை தந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவரது உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர்கள், விமானப்படை தளபதிகள், காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இதனால் பாஜகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் அருண்ஜேட்லிக்கு எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு எக்மோ என்ற கருவியை பொருத்தியுள்ளோம். அந்த கருவியானது இதயம் மற்றும் நுரையீரலை செயல்பட வைப்பதற்கு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.